அர்த்தமுள்ள இந்துமதம் - ஆரோக்கியத்தில் நிம்மதி
படுப்போம்.
மூலஞ்சேர் கறினுகரோம்; மூத்ததயிர் உண்போம்.
முந்நாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம்.
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்,
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!’
பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடல் சார்ந்த உறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம்.
இவ்வாறு மேற்கண்ட ஒழுக்க முறைகளை நடைமுறையில் கடைப்பிடித்து வருவோமானால் நம்மிடம் எமன் நெருங்க அஞ்சுவான்; நீண்ட ஆயுளோடு நாம் வாழ முடியும்.
`உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்;
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்;
நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்;
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!’
ஒரு நாளைக்கு இரண்டு பொழுது மட்டும் உண்போம்; இரவில் நன்றாகத் தூங்குவோம்; பகலில் தூங்க மாட்டோம். பெண்ணின்பால் உடல் சார்ந்த உறவை மாதம் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்வோம். உணவு உண்ணும் போது தாகம் அதிகம் இருப்பினும் இடையிடையே நீரினைப் பருக மாட்டோம்; வாழைக்காயில் பிஞ்சுக்காய்களையே கறி சமைத்து உண்ணுவோம்; முற்றிய காய்களைக் கறி சமைத்து உண்ண மாட்டோம்; உண்டவுடனேயே சிறிது தூரம் நடத்தலாகிய பயிற்சியைச் செய்வோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்; நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வோம்.
`ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருக்கால் பேதியுரை நுகர்வோம்;
தேறுமதி ஒன்றரைக்கோர் தரநசியம் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவிருப் புறுவோம்;
வீறுசதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்;
விழிகளுக் கஞ்சனம்மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியில் முகரோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!’
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம்; ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய பீனச நோய் வராமல் தடுப்போம். வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்; மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இடுவோம்; மணம் வீசும் கந்தம், மலர் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகர்தலைச் செய்ய மாட்டோம். இவ்வாறு மருத்துவ விதிமுறைகளை நாம் மேற்கொண்டொழுகினால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.
`பகத்தொழுக்கு மாதர்அசம் கரம் துடைப்ப
மிவைதூள்
படநெருங்கோம்; தீபமைந்தர் மரநிழலில் வசியோம்;
சுகபுணர்ச்சி அசனபச னத்தருணஞ் செய்யோம்;
துஞ்சலுண விருமலஞ்செய் யோகமழுக் காடை;
வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவைமாலை
விரும்போம்;
வற்சலம்தெய் வம்பிதுர்சற் குருவைவிட மாட்டோம்;
நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மணுக்கோம்;
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!’
மாத விலக்கடைந்த பெண்கள், ஆடு, கழுதை
முதலானவைகள் வரும் பாதையில் எழும் புழுதி, மேலே படும் படி நெருங்கி நடக்க மாட்டோம்; கூட்டுமிடத்தில் உண்டாகும் தூசியும் மேலே படும்படி நடந்து கொள்ள மாட்டோம்; இரவில் விளக்கொளியில் நிற்போரின் நிழலிலும், மர நிழலிலும் நிற்க மாட்டோம்; பசியின் போதும், உண்டவுடனேயும் உடல் சார்ந்த உறவு கொள்ள மாட்டோம். அந்திப் பொழுதில் தூங்குதல், உணவுண்ணல், காமகுரோதச் செயல்கள், அழுக்குடை தரித்தல், தலைவாரி மயிர் உதிரச் செய்தல் போன்ற காரியங்களைச் செய்ய மாட்டோம்; நம்பால் இரக்கம் உள்ள தெய்வங்கள், பிதுரர், குரு ஆகியோரை எப்போதும் வணங்குவோம்; பிறர் கை உதறும் போது, நகத்தினின்று விழும் தண்ணீரும், குளித்து முடி தட்டும்போது உதிரும் தண்ணீரும் மேலே தெறித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம். இத்தகைய நெறிகளில் நாம் நடந்தால், எமன் நம்மை அணுக அஞ்சுவான், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழுவோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - ஆரோக்கியத்தில் நிம்மதி, மாட்டோம், புத்தகங்கள், நீண்ட, கேதுகவை, ஒருமுறை, மிடத்தே, போது, நாமிருக்கு, நமனார்க்கிங், ஆரோக்கியத்தில் , செய்ய, இவ்வாறு, எமன், மேலே, நம்மை, முறை, நாம், கொள்ள, மட்டும், அர்த்தமுள்ள, உண்போம், இந்துமதம், நிம்மதி, உண்ணுவோம், வாழ்வோம், மாதங்களுக்கு, தண்ணீரும், செயல்கள், சமைத்து, விழும், மருந்தை, நிழலிலும், நாட்களுக்கு, கொள்வோம், நான்கு, உட்கொள்வோம், நடக்க, இரவில், தேய்த்துக், பொழுது, எண்ணெய், உணவு, எப்போதும், பகலில், குளிப்போம், அருந்தோம், நெருங்க, செய்யோம், உடல் சார்ந்த உறவு, மூன்று, படுப்போம், அஞ்சுவான், ஆயுளோடு, சிறந்த