அர்த்தமுள்ள இந்துமதம் - இல்லறத்தில் நிம்மதி
கோபத்தில் ஏதாவது வார்த்தை வளர்ந்து விட்டால், அன்று இரவே சமாதானம் செய்து, உடல் சார்ந்த உறவு கொள்ள வேண்டும்.
இலக்கியங்களில், கோபமே இல்லாத காதலர்கள் கூடச் செயற்கையாக ஒரு கோபத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்; அதன் பெயர் ஊடல்.
ஊடலுக்குப் பிறகு கூடல் மிகவும் சுகமாக இருக்கும்.
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால், கணவனுக்கு நிம்மதி.
தன் தாய் வீட்டைப் பற்றிக் கணவன் பெருமையாகச் சொன்னால், மனைவிக்கு நிம்மதி.
பள்ளி அறையிலே கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.
`அவர்கள் வசதியாக இருக்கிறார்கள்; இவர்கள் வசதியாக இருக்கிறார்கள் எனக்குத்தான் ஒன்றுமில்லை’ என்ற ஏக்கம் வரக்கூடாது.
`இந்தக் கட்டில் நல்ல கட்டில். இந்த அறை நல்ல அறை; இதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று நல்ல விஷயங்களையே பேச வேண்டும்.
கணவனோடு இருக்கும்போது, மனைவி மல்லிகை முல்லைப் பூக்களைத்தான் சூட வேண்டும்; கனகாம்பரம், நீலாம்பரம் போன்ற கண்றாவிப் பூக்களைச் சூடக்கூடாது.
தலைக்குத் தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தான் தேய்க்க வேண்டும்; ஷாம்பு போடக்கூடாது.
பெளடர் போடுகிற பெண்ணானாலும், குளிக்கும்போது முகத்திற்கு மஞ்சள் பூச வேண்டும்.
மூக்குத்தி அணிந்த பெண், கணவனை மின்சாரம் மாதிரி இழுப்பவள்.
இன்னும் பெண்ணுக்கு மூக்குக் குத்தாதவர்கள் குத்தி விடுங்கள்.
மூக்குத்தியிலும் கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி (பேசிரி என்பார்கள்) விஷேச சக்தி வாய்ந்தது.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சனூர் அலமேலு – மூக்குத்தி இல்லாத தாயாரைப் பார்க்கவே முடியாது.
காலில் பெருவிரலுக்கு அடுத்த விரலில் வெள்ளியால் மெட்டி போட வேண்டும். கணவனைக் கவர்ச்சிக்கும் பொருள்களில் அதுவும் ஒன்று.
மாத விலக்கானபோது தலையிலே பூ வைக்கக்கூடாது.
சாதாரணமாகச் சமையற்கட்டிற்கே போகக் கூடாது என்பார்கள். மனைவியே சமைக்க வேண்டியிருக்கும் குடும்பங்களில் இன்றைக்கு இது சாத்தியமில்லை.
முக்கியமாகக் கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டியது- `வார்த்தைகளில் ஜாக்கிரதை வேண்டும்’.
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம். சொல்லைக் கொட்டினால் பொறுக்க முடியுமா?
முள்ளாலே பட்ட காயம் விரைவில் மாறும்; சொல்லாலே பட்ட காயம் மாறாது.
கணவன் மனைவி உடல் சார்ந்த உறவில், கணவன் மிகவும் நிதானமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும்.
மனைவி திருப்தியடைய வேண்டுமென்றால், உடல் சார்ந்த உறவின் போது வேறு சிந்தனைகளை மேற்கொண்டு, உறவில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிலே ஒன்றை மட்டும், கணவன் உணர வேண்டும்.
உடல் சார்ந்த உறவுக்கு மனைவியை நெருங்கும் போது, அவளும் திருப்தியடைந்து நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இல்லறத்தைத் தர்மமாக ஏற்றுக்கொண்டு விட்ட மனிதனுக்கு அதை விவரிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
உடல் சார்ந்த உறவில், மனைவிக்கோ, கணவனுக்கோ கசப்புத் தோன்றினால், அது காலா காலங்களுக்கு நிம்மதியைக் கெடுத்துவிடும்.
கூடுமானவரை, மனைவி கூந்தலை நீளமாக வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலின் நீளத்தைப் போலவே கணவனின் ஆசையும் நீண்டு கொண்டிருக்கும்.
இரவு நேரத்தில் கருப்பு, ரத்தச்சிவப்பு, கடல் நீலம் ஆகிய நிறங்களைக் கொண்ட சேலைகள் உடுத்தக் கூடாது. லேசான வர்ணம் படைத்ததாக இருக்க வேண்டும்.
அதிகாலையில் கணவன் தூங்கி கொண்டிருக்கும் போது, அவன் முகத்தருகில் முகத்தைக் கொண்டு வந்து `இதோ பாருங்கள்’ என்று எழுப்பித் தன் முகத்தில் விழிக்க வைக்க வேண்டும்.
காலையில் கணவன் வெளியில் செல்லும் போது, கூடவே சென்று வழியனுப்ப வேண்டும்.
திரும்பி வந்ததும், அவனை ஒரு தட்டிலே நிற்கச் சொல்லி அதிலே தண்ணீரை ஊற்றிப் பாதங்களை நன்றாகக் கழுவி விட வேண்டும்.
வெளி உலகின் அழுக்குகளும், துன்பங்களும் அதோடு கழுவப்பட்டுவிடும்.
கணவனைக் குளிப்பாட்டி விடுவது மனைவியின் கடமையாக இருக்குமானால், கணவனுக்கு அலுவலகத்தில் கூட அவளது ஞாபகம் தான் வரும்.
வீடு சிறியதாக இருந்தாலும், பூஜை அறை என்று ஒன்று கட்டாயம் வேண்டும். அது இயலாதென்றால், ஒரு அலமாரியாவது வேண்டும்.
வானொலி கேட்டாலும், டெலிவிஷன் பார்த்தாலும் குடும்பத்தோடு உட்கார வேண்டும்.
காலையில் வெளியில் புறப்படும்போதே, மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டுப் போக வேண்டும்; பிறகு வந்து, `அது இல்லை இது இல்லை’ என்று சண்டை போடக்கூடாது.
வசதியுள்ளவர்கள் ஒரு வீணை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
கண் விழிக்கும் போது வீணையைப் பார்த்தால், அதைவிட விசேஷம் வேறெதுவும் இல்லை.
ஒருவரையொருவர் அனுசரித்துப் போனால் உலகத்தையே தனக்குள் அடக்கிக் கொள்ள முடியும்.
`இரண்டு கை தட்டினால் தானே சத்தம் கேட்கும்’ என்பார்கள்.
ஒருவருக்குக் கோபம் வந்தால், ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம்.
`பெண்டாட்டிதானே, சொல்லிவிட்டுப் போகிறாள்’ என்றும், `கணவன் தானே, பேசட்டும்’ என்று விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது; உடல் வலிக்காது; ஊர் சிரிக்காது.
ஒரு படத்தில் நான் ஒரு பாடல் எழுதினேன்:
`நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தாலென்ன நமக்குள்ளே!’
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - இல்லறத்தில் நிம்மதி, வேண்டும், கணவன், கொள்ள, மனைவி, நிம்மதி, போது, புத்தகங்கள், என்பார்கள், இல்லறத்தில் , மூக்குத்தி, கணவனுக்கு, அர்த்தமுள்ள, இந்துமதம், கொண்டு, நல்ல, வைத்துக், அதிலே, இருக்க, உடல் சார்ந்த உறவில், இல்லை, காயம், தானே, விட்டுக், சொல்லிவிட்டுப், வெளியில், வந்து, காலையில், கொண்டிருக்கும், போடக்கூடாது, மிகவும், வசதியாக, பிறகு, இல்லாத, சிறந்த, விட்டால், இருக்கிறார்கள், கட்டில், கூடாது, கொட்டினால், ஒன்று, கணவனைக், தான், பட்ட