அர்த்தமுள்ள இந்துமதம் - துறவியானார் பட்டினத்தார்
பீடிருக்க, ஊணிருக்க, பிள்ளைகளுந் தாமிருக்க,
மாடிருக்க, கன்றிருக்க வைத்த பொருளிருக்க,
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே? …. என்று ஆயிரக்கணக்கானவர்கள் வேடிக்கை பார்க்க, தாயின் இல்லத்தின் முன்னாலே நின்று, `தாயே பிச்சை’ என்று கோஷம் கொடுத்தேன்.
கையில் ஏதும் இல்லாமல் வந்த என் தாயார், என்னைப் பார்த்துச் சிரித்தபடி, “மகனே இன்னும் நீ பணக்காரனா?” என்றார்கள்.
“ஏன் தாயே அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன்.
“வீடு உனக்கு அந்நியமாகி விட்டது; ஆனால், ஒரு ஓடு உனக்குச் சொந்தமாகி விட்டதே!” என்றார்கள்.
எனக்கு ஐந்தாவது ஞானம் பிறந்தது.
அந்த ஓட்டைத் தூக்கியெறியப் போனேன்.
“நில், ஓட்டை வைத்துக் கொள். ஆனால், அதன் மீது பாசம் வைக்காதே! அது காணாமல் போனால், `என் ஓடு எங்கே?’ என்று தேடாதே!” என்றார்கள். பிறகு பிச்சை இட்டார்கள்.
அடுத்தது மனைவியின் இல்லம்; அவள் கண்ணீராலே பிச்சையிட்டாள்.
அடுத்துத் தமக்கையின் இல்லம்.
எனது குரல் கேட்டதுதான் தாமதம். ஆச்சி வீட்டின் கதவு அகலத்தில் திறந்தது. எனக்காக காத்திருந்தவள் போல் தோற்றமளித்தாள் என் தமக்கை.
“உள்ளே வா தம்பி. அக்காளின் கையால் பிச்சையிடும் போது, வாசற்படி தாண்டி நிற்கக் கூடாது; ஒரு வேளை சாப்பிட்டுவிட்டுப் போ!” என்றார்கள்.
அந்த பந்தத்தில் நான் உருகி விட்டேன்; விட்ட குறை தொட்ட குறை.
உள்ளே போனேன். தடுக்கு ஒன்று போட்டாள். இலை விரித்தாள். காய்கறி வைத்தாள். அன்னம் படைத்தாள். அள்ளி உண்ணப் போகும் போது “தம்பி!” என்றாள்.
“என்ன?” என்றேன்.
“நானும் நீயும் பெற்றோர்களுக்கு ஒரு மகள், ஒரு மகனாகப் பிறந்தோம். உன் மனம் ஏனோ இப்படி மாறி விட்டது. அதற்காகக் கோடிக்கணக்கான நம் பூர்வீகச் சொத்தை நாய் பேய்கள் தின்னக் கூடாது தம்பி. `என்னுடைய சொத்துக்களெல்லாம் என் ஆச்சி மக்களையே சேர வேண்டும்’ என்று ஒரு ஓலை நறுக்கில் எழுதி ஊர் பெரியவரிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிக் கொடுக்கக் கூடாதா?” என்றாள்.
நான் சிரிக்கவில்லை; அவள் அள்ளியிட்ட அன்னம் சிரித்தது.
பிச்சைக்காரனுக்கு அள்ளி இட்டாலும், பிரதிபலனை எதிர் பார்க்கின்ற சமூகம்.
நான் என்ன பதிலைச் சொல்வேன்.
“நான் இறந்து போய்விட்டால் சொத்துக்கள் உங்களுக்குத் தானே வரப்போகிறது!”
“உன் மனைவி…” என்றாள்.
“அவளையும் கொன்று விடலாமா?…” என்றேன்.
“போகின்ற கோயில்களில் எங்காவது உனக்குப் புத்தி கெட்டு, தர்மச் சொத்தாக்கி விட்டால் எனக்கு எப்படிக் கிடைக்கும்?” என்றார்கள்.
நான் கையில் எடுத்த அன்னத்தை அப்படியே இலையில் போட்டு விட்டு வெளியேறினேன்.
வழியிலே ஒரு குடும்பச் சண்டை.
மூன்று சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
ஒருவன் சொன்னான்: “உங்களோடு பிறந்த பாவத்தை அங்கப் பிரதட்சணம் செய்துதான் தீர்க்க வேண்டும்!” என்று.
எனக்கு எவ்வளவோ தோன்றிற்று.
மறுநாள் நகர் முழுவதும் அங்கப்பிரதட்சணம் செய்ய முடிவு செய்தேன்.
பிறகு திருத்தலங்களுக்குச் செல்வது என்று முடிவு கட்டினேன்.
அன்று இரவு சிவானந்த மடத்தில் படுத்திருந்தேன்.
காலையில் அங்கப் பிரதட்சணம் தொடங்கினேன். என்னுடைய வேலையாட்கள் எல்லாம் பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தார்கள்.
என் தாய் வீட்டருகே செல்லும் போது, என் தாயாருடன் என் தமக்கை சண்டையிட்டுக் கொண்டிருப்பது நன்றாகக் கேட்டது.
“பட்டினத்துச் செட்டி பரதேசி ஆனாண்டி” என்று தெருவிலே ஒரு பெண் பாட்டுப் பாடிக் கொண்டு போனாள்.
அனுபவங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனந்த மார்க்கம் என் கண்ணுக்குத் தெரிந்தது.
கடைகளில் குலுக்கிய நாணய ஓசை என் காதுகளில் விழவில்லை.
தன் வீட்டில் ஒரு வேளை அதிதியாக இருக்கும்படி என்னைக் கேட்டவர்கள் ஏராளம்.
ஆனால், அன்றும் நான் சிவானந்த மடத்து அதிதியே.
இரவு நேரம், மடத்தில் நான் சாப்பிடப் போகிறேன். என் சகோதரி மக்கள் இருவரும் ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.
“அம்மான்! அம்மான்!” என்று அழுதார்கள்.
பழையபடியும் பந்த பாசமா?
சொத்துக்களுக்காகவே என் சகோதரி தன் பிள்ளைகளை அனுப்பி இருக்கிறார்களா?
குழந்தைகளைப் பார்த்து தான் பரிதாபப்பட்டேன்.
தங்கள் தாயை மன்னித்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள்.
“பரமன் மன்னிப்பான்” என்றேன்.
ஓட்டிலேயே ஊற்றிச் சுடும் அப்பம் இரண்டைக் கொடுத்து ஆத்தாள் கொடுத்ததாகச் சொன்னார்கள்.
அவர்களை அனுப்பி விட்டு, அந்த அப்பத்தை பிட்டுப் பார்த்தேன்.
அப்பத்துக்கு நடுவே ஒரு சாண உருண்டை. அதுவும் நீல நிறத்தில் காட்சி அளித்தது. அதன் உள்ளே இருந்தது, எரி நஞ்சு.
அப்பத்தைச் சாப்பிட்டால் அந்த எரி நஞ்சு உள்ளே சென்று சாணம் கரைந்ததும் ஆளைக் கொன்று விடும்.
அதைச் சோதித்துப் பார்க்க விரும்பினேன். இரவோடு இரவாக அதை எடுத்துக் கொண்டு போய் என் தமக்கை வீட்டுக் கூரையின் மேல் போட்டுவிட்டு, `தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச்சுடும்` என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.
மறுநாள் தமக்கை வீடு எரிவதாகச் செய்தி வந்தது.
வெயிலில் சாணம் காய்ந்ததும், விஷத்தால் அது எரிந்து விட்டது.
வீட்டுக்குத்தான் சேதம்! அவர்களுக்கல்ல.
பிறகு நான் அங்கிருந்து திருத்தல யாத்திரைக்குப் புறப்பட்டேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - துறவியானார் பட்டினத்தார், நான், புத்தகங்கள், என்றார்கள், என்றேன், உள்ளே, அந்த, தமக்கை, தம்பி, போது, பட்டினத்தார், வந்து, கொண்டு, விட்டு, என்றாள், பிறகு, துறவியானார் , இந்துமதம், அர்த்தமுள்ள, எனக்கு, விட்டது, சிவானந்த, அங்கப், பிரதட்சணம், இரவு, மடத்தில், முடிவு, மறுநாள், கொண்டார்கள், நஞ்சு, சாணம், சுடும், அனுப்பி, அம்மான், சகோதரி, சிறந்த, கூடாது, வேளை, கையில், வீடு, போனேன், அவள், ஆச்சி, விட்டேன், குறை, கொன்று, இல்லம், என்ன, பார்க்க, அன்னம், அள்ளி, சண்டை