அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதனின் பிறப்புகள் எத்தனை?
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், 1962-இல் நானும் சம்பத் அவர்களும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபோது, மதுரை மாவட்டத்தில் ஒரு காப்பித் தோட்ட அதிபரின் வீட்டுக்குச் சாப்பிடப் போனோம்.
நான் தலைகுனிந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.
ஒரு அம்மையார் சற்று அதிகமாகக் குழம்பு ஊற்றி விட்டார்.
`போதும் அம்மா!’ என்று சொன்னபடியே நிமிர்ந்து பார்த்தேன்.
என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. அப்படியே என் சகோதரியின் தோற்றம், அதே முகம், அதே மூக்குத்தி, அதே சிரிப்பு!
இது என்ன அதிசயம்! இதைவிட அதிசயம், அவர் பெயரும் காந்திமதி தான்!
பாண்டிய நாட்டில் `காந்திமதி’ என்ற பெயர் அதிகம் என்றாலும், இந்த ஒற்றுமையில் எனக்கு மறுபிறப்புத் தத்துவம் தான் தோன்றிற்று.
பகவான் ஒன்று சொல்கிறான், `மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு’ என்று.
உடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால்தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, `அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்கிறோம்.
மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.
அந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வைத்துக் கொண்டு விடுகிறது.
இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித்தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியவில்லை என்றால், கடைசியாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, `ஆத்ம சாந்தி’.
ஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத்மாவும் எப்போதும் சாந்தியடைவதில்லை.
மறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன. மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடருகின்றன.
ஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்.
இங்கே மீண்டும் என் கதைக்கு வருகிறேன்.
இருபது வருஷங்களுக்கு முன்னால், என் எழுத்துக்களை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆண்டுகளுக்கு ஆண்டு அதிலே மாறுதலைக் கவனித்திருக்கிறீர்கள்.
இதற்குக் காரணம் என் திறமை அன்று; பக்தி மார்க்கத்திலே ஏற்பட்ட பற்றுதலே.
முன்பெல்லாம் துன்பங்களில் நடுக்கம் வரும்; தூக்கம் வராது. இப்போது வருவது போல் தூக்கம் எப்போதுமே வந்ததில்லை.
பெரிய பெரிய நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் சிரிப்புத்தான் வருகிறது.
`அது இல்லை, இது இல்லை’ என்ற சிந்தனைகள் எல்லாம் போய்விட்டன.
`இருப்பது கடவுள் கொடுத்தது’ என்று இயற்கையாகவே தோன்றுகிறது.
உடல் நோயைப் பொறுத்தவரை தினமும் மாலையில் ஒரு டாக்டரைச் சந்திக்கிறேன்.
அவர் தான் டாக்டர் கிருஷ்ணன்!
அவரை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது; ஞானக் கண்ணால் தான் பார்க்கலாம்.
சட்டங்களிலும் இ.பி.கோ, இ.பு.கோ. ஆகியவற்றைக் கண்டு நான் பரிதாப்படுகின்றேன்; அவற்றை அலட்சியப்படுத்துகிறேன்.
நான் பயப்படுவது `ப.பு.கோ’ ஒன்றுக்குத்தான்.
அதாவது `பகவான் புரொஸீஜர் கோர்ட்’ ஒன்றுக்குத்தான்.
காரணம் என்னுடைய `புருஷன்’ இப்போது கம்பீரமாக நிற்கிறான்.
வடமொழியில் `புருஷன்’ என்றால் `ஆத்மா’ என்று அர்த்தம்.
கணவன் தான் மனைவியினுடைய `ஆத்மா’ என்பதால் தான் அவனைப் `புருஷன்’ என்று அழைத்தார்கள்.
அடிக்கடி சொல்லும் ஒன்றையே நான் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
`ஒன்று நடந்து தான் தீரும் என்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?’
அத்தனையையும் பகவானிடம் ஒப்படையுங்கள்.
இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட்டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள்; நஷ்டத்தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள்; எது நேர்ந்தாலும் கவலைப்படாதீர்கள்.
விதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடைத்து விடுங்கள்.
எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள்.
யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடுங்கள்.
உங்களை `முட்டாள்’ என்று திட்டினால், `எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கூறுங்கள்.
உங்கள் மனைவி சண்டை போட்டால், `சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று கருதுங்கள்.
யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.
வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள்.
புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்.
`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, `நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.
`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே!’ உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன?
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதனின் பிறப்புகள் எத்தனை?, தான், புத்தகங்கள், மனிதனின், நான், கொள்ளுங்கள், ஆத்மா, ஆத்மாவும், பக்தி, `புருஷன்&, எல்லாம், மீண்டும், என்றால், விடுதலை, அந்த, எத்தனை, இந்துமதம், என்ன, போது, பிறப்புகள் , அர்த்தமுள்ள, `ஆத்மா&, ஒன்றுக்குத்தான், பற்றிக், கண்ணால், விதி, இரண்டு, மூன்று, அனுபவமாகச், கருதுங்கள், உங்களை, விடுங்கள், யாராவது, பெரிய, தூக்கம், ஆண்டுகளுக்கு, கொண்டு, உடம்பை, உயிர், அதிசயம், ஒன்று, விடுகிறது, இந்தப், அவர், இப்போது, காரணம், மார்க்கம், துன்பங்களிலிருந்து, சிறந்த, வருவது