அர்த்தமுள்ள இந்துமதம் - பாவமாம், புண்ணியமாம்!
“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”
“விநாச காலே விபரீத புத்தி.”
இவையெல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.
ஊரைக் கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா?
பிறர் சொத்தைத் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச் செத்தவன் எவனாவது உண்டா?
அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?
எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதி மன்றத்தால் நியமிக்கப்படும் `ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய சந்ததி சாப்பிட்டதில்லை.
கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் உண்டா?
எனக்குத் தெரிந்தவரை இல்லை.
ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச் சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்து விட்டுத்தான் விலகியிருக்கிறது.
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.
இல்லை, பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில்
திரும்பவரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில்
அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!
சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!
முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விடுகிறது.
எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது 1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் போராட்டத்தில் பதினெட்டு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, நானும், நண்பர் அன்பில் தர்மலிங்கமும், மற்றும் இருபது பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.
அவர்களைத் தனித்தனியாகச் சில அறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.
அவர்களிலே, `மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.
செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் திரு. சோமசுந்தரம்.
பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது வழக்கம்.
காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பப் போகும் குற்றவாளி நல்லவனாகத் திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!
அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார்.
செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத் தண்டனையொன்றை அவர் ஊர்ஜிதம் செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஊர்ஜிதம் செய்ததாக அர்த்தம்.
மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
அவரைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை ஊர்ஜிதம் செய்தது.
ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
காரணம், நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.
மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார், விதவை. அந்த வயதிலும் அழகாக இருப்பார்.
சுமார் அறுபதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார்.
சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே துணையாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்.
அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள்.
ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார் மூச்சுத் திணறி இறந்து போனார்.
இறந்த பிறகும் இன்னொருவன் கற்பழித்தான்.
ஆம்; மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித்தான் கூறிற்று.
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன! கொலைகாரர்கள் ஓடிவிட்டார்கள்.
பிடிபட்டவர்கள் ஏழு பேர்.
சிறைச்சாலையில் அந்த ஏழு பேரில் ஆறு பேர் “நாளை தூக்குக்குப் போகப் போகிறோமே!” என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், ஒருவன் மட்டும் சலனம் இல்லாமல் அமைதியாக இருந்தான்.
சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள் அணுகிப் பேச முடியாது.
நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்.
சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக் கொடுத்தோம்.
உடம்பிலே துணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.
நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:
“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதது மாதிரி `அலிபி’ தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”
அவன் சொல்லி முடித்தபோது, `அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழியே என் நினைவுக்கு வந்தது.
அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம்.
தர்மு தன்னையும் மறந்து சொன்னார்,
“என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா!”
ஆமாம், பாவம் கொடுத்த, `போனஸ்’ தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.
அன்று இரவு நான் தூங்கவே இல்லை.
காலை ஐந்து மணிக்கு, “முருகா! முருகா!” என்று பலத்த சத்தம்.
கைதிகள் தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பாவமாம், புண்ணியமாம்!, தூக்குத், தண்டனை, கொலை, நான், அவன், புத்தகங்கள், அவர், அந்த, ஊர்ஜிதம், பேர், அன்று, இல்லை, கைதிகள், பாவமாம், காரணம், இந்தக், மூன்று, முருகா, ஐந்து, தண்டனையை, அப்போது, நானும், இல்லாமல், ஒருவன், இந்துமதம், அர்த்தமுள்ள, புண்ணியமாம், எனக்குத், உண்டா, இரவு, பிரபலமான, சிறைச்சாலையில், கொண்டு, மட்டுமே, நடந்த, அம்மையார், கொல்வான், நாளை, கொண்டிருந்தார்கள், ஆயுட்காலத்திலேயே, செய்த, பாவம், ஏற்கெனவே, பாவத்தின், சிறந்த, மனிதன், செய்தார், தெய்வம், தர்மலிங்கமும், அங்கே, வயதான, அன்பில், நண்பர், தெரிந்தவரை, விதிக்கப்பட்டு, சரியான, பெற்ற, செத்தவன், எவனாவது, எழுதி, நின்று, சம்பளம், செஷன்ஸ், வழக்கில், நிம்மதியாக, எனக்கு