நற்றிணை - 47. குறிஞ்சி
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது, நெய்தற் பாசடை புரையும் அம் செவிப் பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் |
5 |
கானக நாடற்கு, 'இது என' யான் அது கூறின் எவனோ- தோழி! வேறு உணர்ந்து, அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி, வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து, அன்னை அயரும் முருகு நின் |
10 |
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே? |
தோழீ ! தலைவனைப் பிரிந்ததனாலாகிய நின் மெய்வேறுபாட்டைப் பிறிதொன்றாகக் கருதித் தெய்வத்தான் அறியப்படுகின்ற கழங்கில் அம்மாறுபாட்டைக் காட்டுதலாலே வெறி எடுத்தவழித் தீருமென்றறிந்த வுள்ளத்துடனே, மறி அறுத்து அன்னை அயரும் முருகு யாட்டை அறுத்து அன்னையால் வணங்கப் படாநின்ற முருகவேள்; நினது பொன் போன்ற பசலையைப் போக்குதற்குப் பயன்படாமையினாலே; புலியானது பெரிய களிற்றியானையைக் கொன்றதேயென்று அதன் கரிய பிடி யானை; வாடிய துன்பத்தோடும் வருத்தத்தோடும் இயங்க மாட்டாமே; நெய்தலின் பசிய இலையை ஒக்கின்ற அழகிய செவியையுடைய துன்புற்ற தன் (அழகிய) கன்றினை அணைத்துக்கொண்டு; விரைவாகத் தீர்த்தற்கரிய புண்ணுற்றாரைப் போல வருத்தமுற்றிருக்கும் கானக நாடனை நெருங்கி; நீ தலையளி செய்யாமை காரணமாக இப் பசலை தோன்றிற்றுக் கண்டாய் என்று யான் அதனைக் கூறின் அதனால் ஏதேனும் குற்றப்பாடுளதாமோ? உளதாயிற் கூறிக்காண்;
சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - நல்வெள்ளியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 47. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, அறுத்து, குறிஞ்சி, அன்னை, அயரும், நின், அழகிய, பொன், முருகு, கூறின், சங்க, எட்டுத்தொகை, பிடி, கானக, யான், வெறி