நற்றிணை - 399. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் வரி அணி சிறகின் வண்டு உண மலரும் வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
5 |
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் பெருமை உடையள் என்பது தருமோ- தோழி!- நின் திரு நுதல் கவினே? |
10 |
தோழீ! நின் சிறப்புடைய நெற்றியின் அழகானது; அருவியொலிக்கின்ற பெரிய மூங்கில் மிக்க சாரலில்; இரத்தம் போன்ற கமழ்கின்ற காந்தளம்பூ வரிகள் பொருந்திய அழகிய சிறகையுடைய வண்டுகள் உண்ணும்படி மலராநின்ற; அழகிய சிலம்பின் கண்ணே; பன்றி பறித்தலானே நிலத்திலே கிடந்து வெளியிற்போந்து விளங்கிய பலவாய மிக்க அழகிய மணிகளின் ஒளிவிடுகின்ற விளக்கத்திலே; கன்றையீன்ற இளைய பிடியானை தன்னைக் களிற்றியானை அயலிலே காத்துநிற்பத் தன் கன்றொடு வதியா நிற்கும்; கரிய மலை நாடன்; தானே விரும்பினனாகி வருகின்ற பெருமையுடையள் என்பதைத் தராநிற்குமன்றோ? அங்ஙனந் தருமாதலின் அதனை வேறுபடுத்துக் கொள்ளாது விரைய வரையுங்காண்;
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம்வேண்டு மென்றாற்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 399. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, அழகிய, இதற்காய, மிக்க, தலைமகன், புரியும், நல்லது, நாடன், சங்க, எட்டுத்தொகை, திரு, கன்றொடு, தோழி, நின்