நற்றிணை - 393. குறிஞ்சி
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி |
5 |
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி, நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன் இரவின் வரூஉம் இடும்பை நாம் உய, வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப, நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன், |
10 |
நேர்வர்கொல் வாழி- தோழி!- நம் காதலர் புதுவர் ஆகிய வரவும், நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே? |
தோழீ! வாழ்வாயாக!; நீண்ட மூங்கிலுயர்ந்த நிழல் மிக்க மலையில்; முதிர்ந்த சூலினையுடைய வலிய பிடியானை தான் கன்றையீன்று வருந்தாநிற்ப; பால் மடி சுரந்த பசிய ஈன்ற அணிமையினாலுண்டாகிய பசிநோயைத் தீர்க்க வேண்டி; மகிழ்ச்சி மிக்குக் கரிய களிற்றியானை வளைந்த தினைக்கதிரைக்கொய்து கொண்டு போதலாலே; கானவன் கண்டு எறிந்த விரைந்த செலவினையுடைய எரி கொள்ளி; மூங்கில் நிரம்பிய மலைப்பக்கமெங்கும் விளங்கும்படி மின்னி; விசும்பினிடத்தில் நிலை பெற்றிராது தோன்றி மறைகின்ற மின்னலைப்போலத் தோன்றாநிற்கும் மலை நாட்டினராகிய நம் காதலர்; இரவில் வருதலாலாகிய துன்பத்தினின்று நாம் பிழைக்கவேண்டி; அவர் புதியராய் வரும் வருகையும் நின் வதுவைக்காக நீ நாணி ஒடுங்கியிருக்கும் ஒடுக்கமுங் கண்டக்கால்; அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து வரைவதற்கு வந்த வாய்மொழிக்கு ஏற்குமாறு; நம் சுற்றத்தார் மகட்கொடைக்கு உடன்படுவர் போலும், அங்ஙனம் உடன்படுவாராயின்; அவர்தாம் நம் காதலரொடு மகிழ்ந்து பேசுவரோ?; நேர்ந்து பேசுவரெனின் அது மிக்க நன்மையாகுங் காண்;
வரைவு மலிந்தது. - கோவூர் கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 393. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, நிலை, நாம், வந்த, காதலர், மிக்க, நின், மின்னி, கானவன், சங்க, எட்டுத்தொகை, நிழல், கடுஞ், பால், எறிந்த