நற்றிணை - 375. நெய்தல்
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர, கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும் பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப! அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, |
5 |
வருவைஆயினோ நன்றே- பெருங் கடல் இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை எறிவன போல வரூஉம் உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே. |
நீண்ட கிளையையுடைய புன்னையின் நறிய மகரந்தம் உதிரும்படி அக் கிளைகளின்மீது அலங்கரித்தாற்போன்று வைகிய நாரையின் கூட்டம் இரை வேண்டிப் பெயர்ந்து உலாவாநிற்கும்; பலவாகிய மலர்களையுடைய கடற் கரைச் சோலையையும் மிக்க உவர்நீரையுமுடைய நெய்தனிலத் தலைவனே!; நீ பலகாலும் வந்து முயங்கியும் எம்பால் அன்புடையை அல்லை; அங்ஙனம் அன்புடையையா யிருப்பின் அவளுடைய அறிவின் வழியே ஒழுகுகின்ற என்பாலும் சொல்லுவதற்கு வெள்குகின்ற நல்ல நுதலையுடையாளாகிய அத்தலைவி உவக்கும் வண்ணம்; பெரிய கடலிடத்து இராப் பொழுதிலே தண்கதிர்த்திங்கள் தோன்றுதலானே அதுகண்ட வலிய அலைகள் மோதுவனபோல எழுந்து வாராநிற்கும் உயர்ந்த மணல் நிரம்பிய கொல்லைகளையுடைய; யாம் உறைகின்ற எம்மூரிடத்து நீ அவளை மணஞ்செய்து கொள்ளுமாறு வரல் வேண்டும்! அவ்வாறு வருவையாயின் அது மிக நல்லதொரு காரியமாகும்;
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது. - பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 375. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, மணல், எட்டுத்தொகை, சங்க