நற்றிணை - 347. குறிஞ்சி
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை மாதிர நனந் தலை புதையப் பாஅய், ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு, வான் புகு தலைய குன்றம் முற்றி, அழி துளி தலைஇய பொழுதில், புலையன் |
5 |
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன, அருவி இழிதரும் பெரு வரை நாடன், 'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப் பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி வேனில் தேரையின் அளிய, |
10 |
காண வீடுமோ- தோழி!- என் நலனே? |
தோழீ! வேனிற் காலத்து நுணலை மணலுள் முழுகி மறைந்து கிடப்பதுபோல என் உடம்பினுள்ளே பொதிந்து கரந்துறையும் என் நலனானது என்னை ஒறுத்துக் கொன்றொழிவதல்லது; முழங்குகின்ற கடலில் விழுந்து நீர் பருகியதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; திசைகளின் அகன்ற இடமெல்லாம் மறையும்படி பரவி; உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழுமாறு செய்து முழங்கிய இடியினாலே பாம்புகளை மோதி; விசும்பிலுயர்ந்த முடியையுடைய குன்றுகளை ஒருங்கே சூழ்ந்து; சிதைந்த மழையின் துளிகளை யாண்டும் பெய்தொழிந்த பொழுது; புலையனது அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணில் மோதுதலானெழுகின்ற ஒலிபோன்ற ஓசையுடனே அருவி நீர் கீழிறங்கி யோடும் பெரிய மலை நாடனாவான்; இன்னதொரு நிலைமையுடையன் பெரிய அன்புடையவன் என்று; பலவாய அவனுடைய மாண்புகளெல்லாங் கூறும் பரிசிலருடைய நெடிய சிறந்த மொழிகளை; யான் காணவும் கேட்கவும் அங்ஙனம் கண்டு கேட்டுக் களிக்குமளவும் என்னை உயிரோடு விடுமோ?; அவை இரங்கத்தக்கன;
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது. - பெருங்குன்றூர் கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 347. குறிஞ்சி, இலக்கியங்கள், நீர், நற்றிணை, குறிஞ்சி, என்னை, அகன்ற, பெரிய, தோழி, அருவி, எட்டுத்தொகை, சங்க, கூறும்