நற்றிணை - 343. பாலை
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த் தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும் நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து, உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை |
5 |
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய, படையொடு வந்த பையுள் மாலை இல்லைகொல் வாழி- தோழி!- நத்துறந்து அரும் பொருட் கூட்டம் வேண்டிப் பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? |
10 |
தோழீ! வாழ்வாயாக!; முல்லைக் கொடி படர்ந்த மலைவழி ஆகிய சிறிய நெறியைச் சாராது; அழகிய குடிகள் அமைந்த சிறிய ஊரின்கண்ணே; மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்துடைய தெருவின்கண்; செல்லுகின்ற ஆனிரையின் முதுகிலே தீண்டுகின்ற நெடிய வீழிடப்பட்ட கடவுள் உறையும் ஆலமரத்திலிருந்து; அங்குக் கடவுளுக்குப் படைத்துப் போகட்ட பலிச் சோற்றைத் தின்ற தொக்க விரல்களையுடைய காக்கைகள் எல்லாம்; துன்பத்தைத் தருகின்ற மாலையம் பொழுதிலே தம்தம் சுற்ற மிருக்குமிடத்தை அடையாநிற்ப; பிரிந்தாரை யொறுக்கும் படையுடனே வந்த நோயைச் செய்யும் இம் மாலையானது; நம்மைத் துறந்துபோய் ஈட்டுதற்கரிய பொருள் தேடுதலை விரும்பி; பிரிந்துறையும் நம் காதலர் சென்ற நாட்டின்கண்ணே செல்லுவதில்லையோ? சென்று வருத்தினால் அவர் இன்னே வந்திருப்பரே;
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது. - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 343. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, சென்ற, சிறிய, காதலர், கடவுள், எட்டுத்தொகை, சங்க, வந்த