நற்றிணை - 319. நெய்தல்

ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும் தாது உளர் கானல் தவ்வென்றன்றே; மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில், கூகைச் சேவல் குராலோடு ஏறி, ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், |
5 |
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்; பாவை அன்ன பலர் ஆய் வனப்பின், தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள் சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி, மீன் கண் துஞ்சும் பொழுதும், |
10 |
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே? |
கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதை தாது உளர் கானலும் 'தௌ' என்றன்று ஊதைக்காற்று மகரந்தத்தைக் கிண்டுகின்ற கழிக்கரைச் சோலையும் பொலிவு அழிந்ததே!; மணல் மிக்க இம் மூதூரின்கண் உள்ள அகன்ற நெடிய தெருவிலே கூகையின் சேவல் அதன் பெண் பறவையொடு சென்று மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் யாவர்க்கும் அச்சமுண்டாகும்படி குழறா நிற்கும்; பேய்களும் வெளிப்பட்டு உலவாநிற்கும்; ஒருவரையொருவர் அறிதற்கியலாது மயங்கிய அத்தகைய இரவு நடுயாமத்தில்; கொல்லிப் பாவைபோன்ற பலரும் ஆராயும் அழகையும் அகன்ற மெல்லிய பருத்த தோளையுமுடைய மடப்பமிக்க இளமடந்தையினது; தேமல் படர்ந்த அழகிய கொங்கையை முயங்குதல் கருதி; மீன்கள் உறங்கும் இராப்பொழுதெல்லாம் யான் கண் உறங்கிலன்; ஆதலின் இனி என் நிலை எத்தன்மையதாய் முடியுமோ? அறிந்திலேன்;
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது. - வினைத்தொழில் சோகீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 319. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, சேவல், யான், அகன்ற, மணல், தாது, எட்டுத்தொகை, சங்க, உளர்