நற்றிணை - 312. பாலை
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- 'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, மாரி நின்ற, மையல் அற்சிரம்- |
5 |
யாம் தன் உழையம் ஆகவும், தானே, எதிர்த்த தித்தி முற்றா முலையள், கோடைத் திங்களும் பனிப்போள்- வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே. |
பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்தேமாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று;
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 312. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, நின்ற, யான், பருவத்திலும், வேட்டுவன், குழை, எட்டுத்தொகை, சங்க, குவிந்திருந்த