நற்றிணை - 26. பாலை
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப் பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய, சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் |
5 |
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு கெடு துணை ஆகிய தவறோ?- வை எயிற்று, பொன் பொதிந்தன்ன சுணங்கின், இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே. |
அழகமைந்த புள்ளிகளையுடைய வெறுமையாகிய அடியையுடைய மலையை யொத்த அடுக்கிய நிலையமைந்த நெடிய நெற்கூட்டில்; நிரம்பக் கொட்டிய நெல்லையுடைய தன் தாய்வீட்டைக் கைவிட்டு; ஆதித்த மண்டிலம் முற்றும் தன் வெயிலை வீசுதலானே செழுங்காய்கள் திரங்கப் பெற்று முடம்பட்ட முதிர்ந்த பலா மரங்கள் நிரம்பிய கொடிய காட்டில்; நீயிர் தமியராய்ச் சென்று வருந்தாது நுமக்குத் துணையாக வந்த தவற்றினாலே தானோ?; கூரிய பற்களையும் பொன்னைப் பொதிந்து வைத்தாற் போன்ற சுணங்கையும் நெருங்கிய கரிய கூந்தலையும் பெரிய தோள்களையும் உடையாளுக்கு; இஞ்ஞான்று நீயிர் பிரிவேனென்றமையின் உடனே மெய் சோர்தலாலே கைவளைகள் கழன்று விழுந்தன; இப்பொழுதே இப்படியாயின் இனி மீண்டு வருந்துணையும் எங்ஙனம் ஆற்றியிருப்பள்?; இதற்கு யான் நோவா நின்றேன்;
தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது. - சாத்தந்தையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 26. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, நீயிர், எட்டுத்தொகை, சங்க