நற்றிணை - 209. குறிஞ்சி
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் தளி பதம் பெற்ற கான் உழு குறவர் சில வித்து அகல இட்டென, பல விளைந்து, இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள், மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் |
5 |
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே படும்கால் பையுள் தீரும்; படாஅது தவிரும்காலைஆயின், என் உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே! |
மலைச்சார்பிடத்தில் அகலப்படுத்தி வளைத்த கொல்லையாகிய மழை பெய்யும் பதம் பெற்ற காட்டினை உழுகின்ற குறவர்; சிலவாய விதைகளைக் கலப்பாக விதைத்து ஒருசேரப் பலவாக விளைந்து சாய்ந்து கதிர் விளங்கிய தினைக்கொல்லையின்கண்; உள்ளாளாகிய மழலை மாறாத இளமடந்தை பேசுகின்ற இனிய குரலைக் கிளிகளும் அறிந்திருப்பனவே; அவ்வினியகுரல் என் அருகிருந்து மிழற்றின் அன்றே எனது காமநோய் தீரும்; அங்ஙனம் அருகிருந்து மிழற்றப்படாது என்னினின்று நீங்கி அகல்வதாயின்; என் அறிவு முதலாய குணங்களுடன் என் உயிரையும் சேர எல்லாவற்றையும் கைக்கொண்டு அகலா நிற்கும்; இப்படியாயின் அவள் இன்றி யான் எவ்வாறு உய்ய மாட்டுவேன்?
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன். - நொச்சி நியமங்கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 209. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, மழலை, தீரும், அருகிருந்து, குறை, விளைந்து, பெற்ற, எட்டுத்தொகை, சங்க, பதம், குறவர்