நற்றிணை - 201.குறிஞ்சி
'மலை உறை குறவன் காதல் மட மகள், பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்; சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள் உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும், செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் |
5 |
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு, அவ் வெள் அருவிக் குட வரையகத்து, கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் |
10 |
மாயா இயற்கைப் பாவையின், போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே. |
மலையின்கண்ணே உறைகின்ற குறவனின் காதலையுடைய இளமகள் அரிய காவலையுடையவள்; அதனால் நின்னாலே பெறுதற்கரியள் கண்டாய்; நீ கூறிய மொழிகளை ஏற்றுக் கொள்ளும் இயல்புடையள் அல்லள்; அவள் இத்தன்மையளாதலின் அவளை நினைத்தலும் கூடாது என்ற நண்பனே!; சிவந்த வேரையுடைய பலா மரங்களின் பழங்கள் பொருந்திய தெய்வத்தாலே பாதுகாக்கப்பட்டு வருகின்ற; தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெளிய அருவியையுமுடைய கொல்லி மலைச் சாரலிலே; காற்று மோதி யடித்தாலும் வலிய மழை விரைந்து வீசினாலும் சினங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும்; இவையேயன்றி வேறுபல ஊறுபாடுகள் தோன்றினாலும் பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும்; தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினையுடைய பாவைபோல; என்னெஞ்சினின்றும் நீங்கி ஒழிபவள் அல்லளாயிராநின்றாள்; ஆதலின் அவளை யான் எவ்வாறு மறந்துய்வேன்?
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 201.குறிஞ்சி , இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, அழகிய, சினங்கொண்டு, அவளை, கூடாது, எட்டுத்தொகை, சங்க, தீது