நற்றிணை - 187. நெய்தல்
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக, கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய, பல் பூங் கானலும் அல்கின்றன்றே; இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி, மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, |
5 |
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு யாங்கு ஆவதுகொல் தானே- தேம் பட ஊது வண்டு இமிரும் கோதை மார்பின், மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? |
10 |
நெஞ்சமே! நெய்தலின் மலர் குவிய நிழல்களெல்லாம் கீழைத்திசையைச் சென்றடைய மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றைச் சென்று புகுகின்ற ஆதித்த மண்டிலம் சிவந்த நிறமுற்று நிலத்தின் கண்ணே தான் காட்டிய கொடுமை முற்றும் தணியாநிற்ப; பலவாய மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் தன் தோற்றப் பொலிவு குறைவதா யிராநின்றதுமன்; இப்பொழுது உடம்பில் மலியப்பெற்ற காமத்தையுடைய யாம் அக் காமத்தைத் தணிக்கும் வகையைப் பெறாது பின்னே நின்று தொழுது ஒழியும்படி; பொழுது படலும் மணியினம் ஒலிப்பக் குதிரைகளைப் பூட்டப்பட்டுத் தேரானது தான் செல்லுகின்ற புறமும் மறையாநிற்கும்; ஆதலால் இவ்வூருடனே; தேனைப் பொருந்த வுண்ணுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையணிந்த மார்பின்கண்ணே மின்னுதல் பொருந்திய வளைந்த கலன்களையுடைய கொண்கனும்; நாமும் இனிய உவகை பொருந்த முயங்கி விளையாடிய சோலையானது நமக்கு எவ்வண்ணமாக அமையப்படுவதாமோ? அறிகிலேன்;
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது. - அவ்வையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 187. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, தொழுது, தான், பொருந்த, யாம், மண்டிலம், எட்டுத்தொகை, சங்க, பொழுது