நற்றிணை - 137. பாலை
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல், தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின் பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று எய்தினை, வாழிய- நெஞ்சே!- செவ் வரை அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, |
5 |
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர், பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும் குன்ற வைப்பின் கானம் சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! |
10 |
நெஞ்சே! செவ்விய மலையருவியின்கண்ணே அமைந்த நீர் இல்லாத நீண்ட நெறியிடத்தில்; மெல்லிய தலையையுடைய இளைய பிடியானையின் வருந்திய பசியைப் போக்குமாறு; பெரிய களிற்று யானை முறித்துத் தள்ளிய வளைந்த அடியையுடைய ஓமைமரம் செல்லுதற்கரிய சுரத்தின்கண்ணே செல்லுபவருக்குத் தங்கும் நிழல் ஆகாநிற்கும்; குன்றங்களை இடையிடையே கொண்ட கானத்துட் புகுந்து நெடுந்தூரம் அகன்று போதலைக் கருதிய நீ; மெல்லியவாய்க் கமழ்கின்ற பிடரியிலே தாழ்ந்த கரிய கூந்தலையும் அகன்ற மென்மையாகிய பருத்த தோளையும் மடப்பத்தையும் உடைய நல்ல நங் காதலியை; கைவிட்டுப் பிரிதற்கு எண்ணா நின்றனை, அதனை ஆராயுமிடத்து; இதுகாறும் அடைதற்கு அரியதும் இவளினுங்காட்டிற் சிறந்ததுமாகிய ஒருபொருளை அடைந்து விட்டனைமன்; நீ அங்ஙனம் அடைந்த பொருளோடு நீடு வாழ்வாயாக! யான் இவளொழிய வாரலேன்காண்!
தலைவன் செலவு அழுங்கியது. - பெருங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 137. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, நீர், நெஞ்சே, சங்க, எட்டுத்தொகை