குறுந்தொகை - 53. மருதம் - தோழி கூற்று
(தலைவன் வரைவேனென்று உறுதிமொழி கூறிய பின்பும் நெடுங்காலம் கழிந்தது கண்டு தலைவி வருந்துதலை யறிந்த தோழி தலைவனை நோக்கி, “நீ கூறிய உறுதிமொழிகள் எம்மை வருத்தின; அவை பிறழாமல் நீ இனி விரைவில் மணந்துகொள்ள வேண்டும்” என்று கூறியது.)
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை |
5 |
நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே. |
|
- கோப்பெருஞ் சோழன். |
தலைவனே முன்னிடத்திலுள்ள அரும்பு முதிர்ந்த புன்க மரத்தின் மலர்கள் உதிர்ந்து பரந்து தங்கிய வெள்ளிய மணற்பரப்பினது வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டெடுக்கும் இடந்தோறும் செந்நெல்லினது வெள்ளிய பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும் மணல் மேடுகள் பொருந்திய எம்முடைய ஊரிலுள்ள அகன்ற நீர்த்துறையில் நுண்ணிய மூட்டுவாயையுடைய முன் கையைப் பிடித்து தெய்வமகளிரைச் சுட்டிக் கூறிய சத்தியம் எம்மைத் துன்புறுத்தின.
முடிபு: மகிழ்ந, எம்மூர் வியன்றுறையில் நீ உற்ற சூள் எம்மை அணங்கின.
கருத்து: நீ உன் உறுதிமொழிக்கேற்ப விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 53. மருதம் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, மருதம், கூறிய, குறுந்தொகை, எம்மூர், வெள்ளிய, மகிழ்ந, எம்மை, எட்டுத்தொகை, சங்க, விரைவில்