குறுந்தொகை - 194. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததை மேகத்தின்ஒலியாலும் மயிலின் மகிழ்ச்சியாலும் அறிந்த தலைவி தோழிக்குத் தன்ஆற்றாமைக் காரணத்தை அறிவித்தது.)
என்னெனப் படுங்கொல் தோழி மின்னுவர வானோர் பிரங்கும் ஒன்றோ அதனெதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும் ஏதில கலந்த இரண்டற்கென் பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே. |
5 |
- கோவர்த்தனார். |
தோழி! மின்னி மேகம் எழுந்து ஒலிக்கின்ற செயல்ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது? அந்தமேகம் ஒலித்ததற்கு எதிரே காட்டிலுள்ளமயில்கள் விரைவனவாகி ஆரவாரிக்கும்; இவ்வாறு அயன்மையையுடையனவாகிக் கலந்த இரண்டு பொருளாலும் எனது பேதைமையை யுடைய நெஞ்சம் பெரிய கலக்கத்தை அடையும்; இந்நெஞ்சினது நிலை எத்தகையதென்று சொல்லப்படும்?
முடிபு: தோழி, வான் இரங்கும் ஒன்றோ? மஞ்ஞை ஏங்கும்;இரண்டற்கு என் நெஞ்சம் மலக்குறும்.
கருத்து: கார்ப்பருவம் வந்தமையின் என் மனம் கலங்குகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 194. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, நெஞ்சம், குறுந்தொகை, தோழி, ஏங்கும், கலந்த, மஞ்ஞை, கார்ப்பருவம், எட்டுத்தொகை, சங்க, ஒன்றோ