அகநானூறு - 98. குறிஞ்சி
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன், துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த இனிய உள்ளம் இன்னாஆக, முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் |
5 |
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல் செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி, கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ, 'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து, |
10 |
ஓவத்தன்ன வினை புனை நல் இல், 'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ, கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து, ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், |
15 |
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர் ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா, செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன் வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன் பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், |
20 |
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக ஆடிய பின்னும், வாடிய மேனி பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, |
25 |
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி, வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே, 'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக் கான் கெழு நாடன் கேட்பின், யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே. |
30 |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 98. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, வெறி, தோழி, அரிதே, பெரும், கெழு, எட்டுத்தொகை, சங்க, இரீஇ, பண்டையின்