அகநானூறு - 45 . பாலை
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
5 |
காடு இறந்தனரே, காதலர். மாமை, அரி நுண் பசலை பாஅய், பீரத்து எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
10 |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, ஆதிமந்தி போல, பேதுற்று அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
15 |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய உடை மதில் ஓர் அரண் போல, அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 45 . பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க