அகநானூறு - 149. பாலை
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் அத்த நீள் இடைப் போகி, நன்றும் |
5 |
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன் கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் |
10 |
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, |
15 |
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. |
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 149. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, கொடி, எட்டுத்தொகை, சங்க