தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள்
தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி
திரு. டி.கே.ஷண்முகம்
பாரத நாட்டின் தென் பகுதியில் கலை வளம் நிறைந்த திருநாடாகத் திகழும் தமிழ் நாட்டில், வேகமாக வளர்ந்துவரும் நாடகக் கலையைப் பற்றிச் சொல்வது இக்கட்டுரை.
முதன் முதலாக, தமிழ் நாடகக் கலையுலகின் நல்வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தாய் மொழியாகிய தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கிய வளஞ்செறிந்திருக்கும் மொழியென்பது உங்களுக்குத் தெரியும். உலகத்தில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு எங்கள் தமிழ் மொழிக்கிருக்கிறது.
தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவாக எங்கள் முன்னோர் வகுத்திருக்கிறார்கள். ஒரு விஷயத்தைச் சொல்லால் விளக்குவதை 'இயல்' என்றும், பாட்டால் விளக்குவதை 'இசை' என்றும், நடிப்பால் விளங்குவதை 'நாடகம்' என்றும் பிரிவு செய்து இம்மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியே இலக்கண விதிமுறைகளும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
டி.கே.ஷண்முகம் |
சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படும் 'சிலப்பதிகாரம்' என்ற தமிழ்க் காப்பியத்தில் நடிப்புக் கலையைப் பற்றியும், நாடக அரங்க அமைப்பைப் பற்றியும், காட்சித் திரைகளைப் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சிலப்பதிகார நூலுக்கு உரையெழுதிய 'அடியார்க்கு நல்லார்' என்பவர் தமது குறிப்பில், நாடகத் தமிழைப் பற்றிக் கூறும் 'பரதம்', 'அகத்தியம்' என்ற நூல்கள் இருந்தனவென்றும் அந்த நூல்கள் அழிந்துவிட்டனவென்றும் குறிப்பிடுகிறார்.
5000 ஆண்டுகளுக்கு முன் குமரி முனையையடுத்து இலெமூரியாக் கண்டம் என ஒன்று இருந்ததாகவும் அங்கே பாண்டியர் அரசாட்சியில் சங்கம் அமைத்து மொழியாராய்ச்சி நடைபெற்றதாகவும் பெருங்கடல் கோளினால் அந்த நாடு நகரங்கள் அழிவுற்றபோது நாடக இலக்கண நூல்கள் பல அழிந்துபோயினவென்றும் தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படுகின்றன.
அடியார்க்கு நல்லார் தம்முடைய காலத்தில் 'பரத சேனாபதீயம்', 'மதிவாணர் நாடகத் தமிழ் நூல்' முதலிய நாடக நூல்கள் இருந்ததாகக் குறித்திருக்கிறார். இப்போது நான் குறிப்பிட்டவையெல்லாம் நாடக இலக்கண நூல்களே தவிர ஒன்றுகூட இலக்கியமன்று.
நாடக இலக்கியங்கள் படித்து மகிழும் இலக்கியங்களல்ல. மேடையில் பார்த்து மகிழும் இலக்கியங்கள். எனவே, நூல் வடிவில் ஒன்றும் கிடைக்காவிட்டாலும் மேடைகளில் நாடகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறதென்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.
இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகிய மன்னர்கள் நாடகம் நடிப்போருக்கு மான்யங்கள் கொடுத்திருக்கும் குறிப்புக்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராஜ ராஜ சோழனின் வெற்றியைக் குறிப்பிடும் 'இராஜ ராஜ விஜயம்' என்ற நாடகம் அந்த மன்னன் காலத்திலேயே தஞ்சாவூர்க் கோவிலில் நடிக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
நகரங்களிலும், கிராமங்களிலும், மன்னர் அரண்மனைகளிலும், கோவில்களிலும் அப்போதைக்கப்போது மேடைகள் அமைக்கப்பட்டுத் திறந்த வெளிகளில் நாடகங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றனவென்று தெரிகிறது. இத்தகைய தெருக்கூத்து மேடைகள் இன்னும்கூடக் கிராமங்களில் நடைபெற்று வருகின்றன.
நூல் வடிவில் இதுவரை எங்களுக்குக் கிடைத்திருக்கும் நாடகங்கள் எல்லாம் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவையென்றே சொல்லவேண்டும். அவை முழுதும் பாட்டாக அமைந்திருக்கின்றனவே தவிர வசனநடை நாடகம் ஒன்றுகூட இல்லை. பழங்காலத் தமிழ் நாடகங்கள் முழுதும் பாடல்களாகவே இருந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. அரிச்சந்திரா, இராமாயணம், மகாபாரதம் முதலிய நாடகங்கள் அனைத்தும் பாடல்களாகவே இருக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், நாடக, நாடகம், நாடகக், நாட்டில், நூல்கள், இலக்கண, வளர்ச்சி, நாடகங்கள், பற்றியும், நடைபெற்று, இராஜ, என்றும், நூல், அந்த, முதலிய, கலைக், கட்டுரைகள், வடிவில், ஆண்டுகளாகத், மகிழும், இலக்கியங்கள், ஒன்றுகூட, தொடர்ந்து, drama, மேடைகள், பாடல்களாகவே, கல்வெட்டுகளில், சோழன், தவிர, முழுதும், arts, ஆண்டுகளுக்கு, உங்களுக்குத், தெரிகிறது, தனிச், விளக்குவதை, எங்கள், கிடைக்கின்றன, கலையைப், ஷண்முகம், கலைகள், நாடகத், நல்லார், அடியார்க்கு, இயல்