சிந்துப்பாவியல்

29.
-
அடிகள் அனைத்தும் கழிநெடில் ஆகும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் உள்ள அடிகள் எட்டு சீர்க்குக் குறையாமல் வரும் என்பதை முன்னர்க் கண்டோம். (நூ. 28 விளக்கம்). ஆறு சீர்களைக் கொண்ட அடிகளும் அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடிகளும் கழிநெடிலடிகள் எனப் பெயர்பெறும்.
இரு சீரடி குறளடி என்றும், முச்சீரடி சிந்தடி என்றும், நாற்சீரடி அளவடி என்றும், ஐஞ்சீரடி நெடிலடி என்றும், அறுசீர் முதலியன கழி நெடிலடி என்றும் கோடும் என்பது. (தொல். பொ. செய். பேரா. உரை)
சிந்துப் பாடல்களின் அடிகள் தாளங்களின் அடிப்படையை உடையன. ஆதிதாளம், சதுசிர ஏக தாளம், ஆகிய இரண்டு தாளங்களே சிந்துப் பாடல்களில் பெரிதும் இடம் பெறுகின்றன. எட்டு. பன்னிரெண்டு, பதினாறு, இருபது, இருபத்து நான்கு சீர்களை உடைய கழிநெடிலடிகளே சிந்துப் பாடல்களில் பயின்று வருகின்றன.
இவற்றுள் பன்னிரெண்டு, இருபது சீர்களையுடைய அடிகள் சதுசிர இன ஏக தாளத்தின் வட்டணைகளில் அடங்கும். எட்டு, பதினாறு, இருபத்து நான்கு சீர்களை உடைய அடிகள் ஆதி தாள வட்டணைகளில் அடங்கும். சதுசிர இனத்துருவ தாளத்தில் அடங்கும் பதினான்கு சீர் அடிகள் பயிலும் சிந்துப் பாடல்களும் சிறு பான்மை உண்டு.
குறளடி, சிந்தடி, நெடிலடி, அறுசீர், எழுசீர்க் கழிநெடிலடிகள் சிந்துப் பாக்களில் வருவதில்லை.
‘ஓம் சக்தி’ என்ற பாடலடி எட்டு சீர்களைக் கொண்டது; ‘கண்ணாயிரம்’ என்ற பாடலடி பன்னிரெண்டு சீர்களைக் கொண்டது; ‘சந்தவரை’ என்ற பாடலடி இருபது சீர்களைக் கொண்டது என்பதனை முன்னர்க் கண்டோம். (நூ. 28 விளக்கம்)
தாளமில்லாத சிந்துப் பாடல்களில் நாற்சீரடிகள் வருவதுண்டு. தாளமுடைய சிந்துப் பாக்களில் சீர் எண்ணிக்கையின் சிறுமை எட்டு; பெருமை பாடுவோர் உள்ளக் கருத்தின் அளவே; நாற்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடிகளும் வந்துள்ளன.
காட்டு :
- பத்மினி சாதிப்பெண் மானே - பாம்பன்
பார்க்கவ ருவாய்நீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்துவை போகம்- குறப்
பாவையின் மீதினில் மோகம்- கொண்ட
பண்பதனால் மேவும்நல் யோகம்- மலர்
பைங்க்காவியை யுங்காலனை யுஞ்சேலினை யும்பார்வைகொள்
பச்சைக்கொடி இடையும்பிடி இச்சித்திடு நடையுங்கொடு
பதுமத்தின ரும்புக்கலர் தருபொற்றன மிஞ்சப்பெறு
பனசக்கனி ரசமொத்துறு வசனத்திலென் மனசைக்கவர்
(பத்மினி)
இச்சிந்துப் பாடலின் ஓரடி 11 நான்மை இன ஏக தாள வட்டணைகளில் அடங்கும். 44 சீர்கள்ப் பெற்றுள்ளது. இப்பாடலில் பிற்பகுதி ஓருவகைச் சந்த அமைப்பில் அமைந்துள்ளதையும் எல்லா அரையடிகளுமே பகர மோனை ஒன்றனாலேயே தொடுக்கப் பெற்றுள்ளதையும் காண்க.
30.
-
ஒற்றை எண்களால் ஆனசீர் அடிகள்
சிந்துப் பாக்களில் சேர்தல் இல்லை.
விளக்கம் : சிந்துப் பாடல்கள் பெரும்பாலும் நான்மை இன ஏக தாளத்திலும், ஆதி தாளத்திலும் நடக்கின்றன. ஆகவே அப்பாடல்கள் 8, 12, 16, 20, 24 முதலிய எட்டாலும், நான்காலும் வகுபடும் எண்களையுடைய சீர்களாலேயே இயங்குகின்றன. ஒற்றைப்படை எண்களால் ஆன சீர்களைச் சிந்துப் பாடல்கள் கொண்டிருப்பதால், அவை மேற்குறித்த இரண்டு தாள வட்டணைக்குள் அடங்கி இயலா. ஆகவே, சிந்துப் பாடல்களில் ஒற்றைப் படைச் சீர் எண்ணிக்கையை உடைய (9, சீர், 11 சீர், 15 சீர், 19 சீர்) அடிகளை போல்வன வருவதில்லை என்பது உணரக் கிடக்கிறது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

