சிந்துப்பாவியல்

31. இயைபுத் தொடை
-
இயற்பாத் தொடைகளாம் எதுகையும் மோனையும்
இயைபும் சிந்திலும் இயலும்; எனினும்
இயைபுத் தொடைபல இடங்களிற் பயிலுதல்
சிந்துப் பாடலின் சிறப்பா கும்மே.
விளக்கம் :
எதுகை : முதல் எழுத்து அளவொத்துவர அடுத்த எழுத்து ஒன்றோ பலவோ ஒன்றுவது எதுகை எனப்படும். அது அடியெதுகை, சீரெதுகை என்று இரண்டு வகைப்படும். சீரெதுகையிலும் அடியெதுகை சிறப்புடைத்து.
காட்டு :
கொந்து குழல் இந்நுதல் யானைக் - கோடு கும்பமெனும் இன்பமுலை அம்பிகையின் உதவும் நந்துலவு சிந்துதிரை வீசும் - சந்த னாசலகு கேசனடி நாடிடுமென் மனமே (வ.க.கா.சி. 4)இதில் கொந்து - நந்து என்பன அடியெதுகைகள். கொந்து-இந்து, கும்ப-இன்ப-அம்மி, என்பவையும் நந்து-சிந்து-சந்த என்பனவும், னாசலகு-கேசனடி என்பனவும், சீரெதுகைகள்.
மோனை : முதல் எழுத்து ஒன்றுவது மோனை. இது அடிமோனை, சீர்மோனை என்று இருவகைப்படும், அடிமோனையிலும் சீர்மோனை சிறப்புடையது.
மேற்காட்டிய கண்ணியில் அடிமோனை இல்லை. கொந்து-கும்ப என்பதும், நந்து-நாடிடு என்பதும் சீர்மோனைகள்.
இயைபு : இறுதி ஒன்றி வருவது இயைபு எனப்படும். இசைப் பாக்களுக்கு இயைபு சிறந்தது. இயைபிலும் அடியியைபு, சீரியைபு என இரண்டு வகையுண்டு. அடியியைபே சிறப்புடையது. எனினும் இசைப் பாடல்களில் ஒவ்வொரர் அரையடியும் ஒரு வரியாக வருவதால் அவற்றின் இறுதியில் வருவன சீரியைபாக இருந்தாலும் சிறப்புடையனவாகவே உள்ளன. அடியிறுதி, அரையடி இறுதியோடு வேறிடங்களிலும் வருதலுண்டு. காவடிச் சிந்துப் பாடல்களில் இவற்றைக் காணலாம். ஒரடியில் நான்கு, ஐந்து இயைபுகளும் வருதலுண்டு.
காட்டு :
நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை - வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (சி.பா.ப.224)இந்த ஆனந்தக் களிப்பில் ஆண்டி, வேண்டி, தோண்டி, தாண்டி என்ற இயைபுகள் அரையடி தோறும் வந்துள்ளதால் பாடலில் ஒலி நயம் நிறைந்திருப்பதைக் காணலாம்.
காட்டு :
என்னடி நான்பெற்ற மங்கை - இள நங்கை - விடல் சங்கை - என்ன இப்படி ஆயிற்றே செங்கை - வளை இடர்பெற்றிட உடைபட்டன நடைகெட்டது னுடையிற்பல எய்தின சந்தனப் புள்ளி - என்ன செய்தனை சொல்லடி கள்ளி (கா.சி.க.வ.ப.194)இந்த அடியில் மங்கை-நங்கை-சங்கை-செங்கை என்றும், புள்ளி-கள்ளி என்றும் இயைபுகள் வந்துள்ளதைக் காண்க.
எனவே இயற்பாத் தொடைகளாகிய எதுகைத் தொடையும், மோனைத் தொடையும், இயைபுத் தொடையும் சிந்துப் பாடல்களிலும் வரும் என்பதும், அவற்றில் இயைபுத் தொடை சிந்துப் பாடலின் பல இடங்களிலும் பயின்று வந்தால் பாடல் சிறப்பாக இருக்கும் என்பதும் உணரத் தக்கனவாகும்.
32. சிந்துகளைப் பாடும் முறை
-
எவ்வகைச் சிந்தும் இசைக்குங் காலை
எதுகை மோனைத் தொடைபெறும் இடங்களால்
அடியின் தொடக்கமும் அரையடித் தொடக்கமும்
தாளச் செயல்களில் தட்டுடன் ஒன்றி
அமையப் பாடுதல் அழகுடைத் தாகும்.
விளக்கம் : சிந்துப் பாடலில் அடிகளின் தொடக்கத்தில் எதுகைச்சீர் இருக்கும். தாளங்கள் தட்டிலிருந்து தொடங்குகின்றன. எதுகைச்சீர் தாளத்தின் தட்டுடன் தொடங்குகிறது. அதுபோல், பெரும்பாலும் அவ்வடியில் பாதியில் உள்ள மோனைச் சீரும் தாளத்தின் மற்றொரு தட்டில் தொடங்க வேண்டும். அப்போதுதான் அந்த அடியைப் பாடுகையில் எதுகை மோனைகளினால் உண்டாகும் ஒலியின்பம் கிடைக்கும். ஆதிதாள வட்டணை எட்டு எண்ணிக்கை உடையது. அதன் தொடக்கத்தில் கோலின் தட்டு விழுகிறது; சரி பாதியில், அதாவது ஐந்தாம் எண்ணிக்கையில் முதல் சுழியின் தட்டு விழுகிறது. கோலின் தட்டில் எதுகைச்சீர் தொடங்கினால் முதல் சுழியின் தட்டில், அடியின் பாதியில் அமையும் மோனைச்சீர் தொடங்குகிறது. இது பாட்டின் ஒலிநயத்திற்கு துணை செய்கிறது.
எண்சீரடிகளை எட்டு எண்ணிக்கையுடைய வேறு தாளங்களில் பாடினால் மோனைச்சீர் உள்ள அரையடி எடுப்பில் தட்டு விழாது. அதனால் பாட்டின் ஒலியின்பம் முழுமையாகக் கிடைக்காது. அடித் தொடக்கத்தில் போலவே அடியடியின் தொடக்கங்களில் தட்டு விழும்போது சற்று அழுத்தம் கொடுத்துப் பாடுவது மரபு. இது இசையின்பத்தை மிகுவிக்கும்.
1400
காட்டு :
-
கணப திரா . யன் . அ - வனிரு
காலைப்பி டித்திடு வோம் . . . . .
1303
காட்டு :
-
கணப திரா . யன் . அ
வனிரு காலைப்பி
டித்திடு வோம் . . . . .
சில சிந்துப் பாக்களில் சீர் எண்ணிக்கை மிகுதியாக உள்ள அடிகள் வரும். அதில் பலவிடங்களில் மோனை அமைந்திருக்கும். அவற்றிலும் இந்நெறிமுறை பின்பற்றப் படவேண்டும்; காட்டாக,
1400
-
வன்னத்தி னைமாவைத் தெள்ளியே - உண்ணும்
வாழ்க்கைக்கு றக்குல வள்ளியே - . உயிர்
வாங்கப்பி றந்திட்ட கள்ளியே - . இரு
வடமேருவை நிகராகிய புயமீதணி பலமாமணி
மாலைப டீரெனத் துள்ளியே - . விழ
வான்மதி வீசுந்தீ யள்ளியே . . .
(கா.சி.க.வ.ப.180)
நான்மையின ஏக தாளத்தில் அடங்கும் அடிகளில் மோனைச்சீர்கள் யாமும் கோலில் தொடக்கத்திலேயே தட்டுகளில் வருவதைக் காணலாம்.
காட்டு : 14
-
பத்மினி சாதிப்பெண் மானே - பாம்பன்
பார்க்கவ ருவாய்சீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்தும்வை போகம் - குறப்
பாவையின் மீதினில் மோகம் - கொண்ட
பண்பதனால் மேவும்நல் யோகம் - மலர்
(பாம்பன் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வழிநடைச் சிந்து)
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

