சிந்துப்பாவியல்

33. கண்ணி
-
எண்ணும் இரண்டடி எதுகை ஒன்றின்
கண்ணி என்று கருதப் படுமே
விளக்கம் : கண்ணி என்பது கண்ணை உடையது என்று பொருள்படும். கண்-கணு, மூங்கில், கரும்பு முதலியவற்றில் கணுக்கள் உட்பகுதியாக அமைந்திருப்பது போல் பாடல்களின் உட்பகுதியாக இரண்டிரண்டு அடிகள் ஓரெதுகை பெற்று அமைந்திருப்பின் அவை கண்ணிகள் எனப்படும்.
காட்டு: காவடிச் சிந்து
-
தண்மதி ஒண்முகப் பெண்மணியே - உன்னைத்
தான்கொண்ட நாயகர் ஆரேடி
அண்மையில் பொன்னணி அம்பலத் தாடல்செய்
ஐயர் அமுதர் அழகரடி
(திருவ. 2971)
இதிலிருந்து ஓரெதுகையில் வரும் இரண்டடிகள் ஒரு கண்ணியென்பது பெறப்படும்.
34.
-
நாலடி பெற்று நடக்கும் கண்ணியும்
ஓரடிக் கண்ணியும் உளவென மொழிப
விளக்கம் : பெருவழக்காக வரும் இரண்டடிக் கண்ணிகள் முன்னர் கூறப்பட்டன. (நூ. 33). சிறுபான்மையாக வரும் நான்கடிக் கண்ணிகளும், ஓரடிக் கண்ணிகளும் இங்கு எடுத்துக் கூறப்படுகின்றன.
நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவரும் கண்ணிகளும், சிறுபான்மை வருவதுண்டு.
காட்டு :
நாலடிக் கண்ணி
-
நெஞ்சுபொ றுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சியஞ் சிச்சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்களென் பார் - இந்த
மரத்திலென் பார்அந்த குளத்திலென் பார்
துஞ்சுது முகட்டிலென் பார் - மிகத்
துயர்படு வாரெண்ணிப் பயப்படுவார்
இந்த நான்கடிகளும் நெஞ்சு-அஞ்சி-வஞ்ச-துஞ்சு என்ற ஓரெதுகையினால் ஒன்றாகத் தொடுக்கப்பட்டுள்ளன.
ஓரடிக் கண்ணிகளும் சிறுபான்மை வருவதுண்டு.
காட்டு : ஓரடிக் கண்ணி
-
1. ஐயா ஒரு சேதி கேளும் - உங்கள்
அடிமைக்கா ரப்பறையன் நடத்தையெல்லாம்
2. வரவரக் கெட்டுப்போச்சு - சேரியில்
வழக்கமில் லாதபடி பழக்கமிட்டான்.
(கோ.கொ.பா.நந்த.சரி.கீ.வ.49)
இவ்வாறு சிறுபான்மையாக நான்கடிக் கண்ணிகளும், ஓரடிக் கண்ணிகளும் வரும் என்பதனை அறியலாம்.
ஓரடிக் கண்ணியும் என்பதில் உள்ள உம்மையால், மிகவும் அருகி மூன்றடிக் கண்ணிகளும் வரும் என்பது கொள்ளப்படும்.
காட்டு : மூன்றடிக் கண்ணி
- எடுப்பு
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சி என்றழைத்தான் ஏனென்றான் மாலை? (மாடு)
தொடுப்பு
பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடியிருந்தேன் (மாடு)
முடிப்பு
காளைசொற்படி மறு . நாளைக்குச் சென்றேன்
கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து குடியென்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பாலென்றேன்
அல்லடி காதற் கலப்பால்தான் என்றான் (மாடு)
(பாரதிதாசன் இசையமுது.பக்.2)
இம்மூன்று அடிகளும் காலை-வேளை-ஆளன் என்ற ஓரெதுகையினால் ஒன்றாகத் தொடுக்கப் பட்டுள்ளன.
எனவே மிகவும் அரிதான மூன்றடிக் கண்ணியும் வருவது உண்டு என்று உணரலாம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

