சிந்துப்பாவியல்

23. தனிச் சொல்
- சிந்துப் பாக்களில் சேரும் தனிச்சொல்
அடிகளின் அகத்த தாகப் பெறுமே.
விளக்கம் : தனிச்சொற்களில் இரண்டு வகையுண்டு. (1) அடிக்குள் அடங்கி அதன் ஒரு சீராகக் கணக்கிடப்பட்டு வரும் தனிச்சொல். (2) அடியிலடங்காது, அதற்குப் புறம்பாக வரும் தனிச்சொல், நேரிசை வெண்பாக்களில் வரும் தனிச்சொற்களை முதல்வகைக்குச் சான்றாகக் காட்டலாம்.
காட்டு :
-
வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே
செவ்வாய வன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் வரிகதிரோன் வெற்பு. (நளவெண்பா: 97)
காட்டு :
- இவரே
பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பின் பாரிமகளிர்
யானே
பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன் (புறம் 200)
‘ஆறுமுக’ என்ற பாடலில் முதல் அரையடியின் இறுதியில், ‘சற்றும்’ என்றும், இதுபோலவே இரண்டாம் அரையடியில் ‘சும்மா’ என்றும், இரண்டாம் கண்ணியில் அதே இடங்களில் ‘இதை’ என்றும், ‘இந்த்ர’ என்றும் தனிச்சொற்கள் வந்தன. இப்பாடலில் ஒவ்வோர் அடியிலும் முதல் அரையடியின் இறுதி இரண்டசைகளாக அடிக்குள் அடங்கித் தனிச்சொற்கள் வருகின்றன. ஆகவே சிந்துப் பாக்களில் சேர்ந்திருக்கும் தனிச்சொற்கள் அடிக்குள் அடங்கிய தனிச் சொற்கள் என்பது தெளிவாகிறது.
----
24
- ஈரசை மூவசை இயல்பின தனிச்சொல்
நாலசை யானும் நடப்பன உளவே.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் தனிச்சொற்கள் அரையடிகளின்ன் இறுதியில் தனியே பிரிந்திசைக்கும். பெரும்பாலான சிந்துப் பாக்களின் அடிகளில் (அது எந்த நடையினதாக இருந்தாலும்) முதலாவதாக வரும் தனிச்சொல் நான்காம் சீரின் இடத்தில் வருதல் இயல்பாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று அசைகளையுடைய தனிச் சொற்களே சிந்துப் பாடல்களில் மிகுதியாக வருகின்றன.
நொண்டிச்சிந்து: நொண்டிச் சிந்தில் வரும் தனிச் சொற்கள் மூவசைக்கு மிகாமல் வருதல் பெரும்பான்மை. நாலசைத் தனிச்சொல்லும் அருகி வரும்.
காட்டு : நொண்டிச் சிந்து
-
பழனம ருங்கணையும் - புலைப்
பாடியது கூரை வீடுதனில்
கரையோ படர்ந்திருக்கும் - அதைச்
சுற்றிலும் நாய்கள் குரைத்திருக்கும் - (நந்த. சரி. க.ப. 5)
-
சேண்தொடு மாமலையும் - நதிகளும்
செறிந்து பல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்பு று நன்னாடாம் - வண்டுறை
வாவிசூழ் நாவலந் தீவுதனில் - (திரு. நொ. நா. ப. 7)
வளையற் சிந்து: வளையற் சிந்தில் 8, 12, 16 ஆம் சீர் இடங்களில் வரும் தனிச் சொற்களில் ஓரசை, ஈரசைத் தனிச் சொற்கள் உள்ளன.
காட்டு : வளையற் சிந்து
-
வாருமையா வளையல் செட்டி
வளையல் விலை கூறும் - நீர்
மகிழ்ந்துமே கை பாரும் - பசி
வன்கொடுமை தீரும் - எந்த
மாநகரம் பேர் இனங்கள்
வகை விபரம் கூறும் (தொடை. மேற்.ப.273)
கும்மி : கும்மியில் தனிச் சொல் ஈரசைச் சொல்லாக வரும்.
காட்டு : கும்மி
-
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்திபி றக்குது மூச்சினிலே (பா.கவி.ப. 165)
ஒயிற்கும்மி : ஒயிற் கும்மியில் நாலசைத் தனிச் சொற்கள் வரும்.
காட்டு : ஒயிற் கும்மி
-
மாவும்ப லாவும்கொய் யாவும்மா ரஞ்சியும்
வன்னப்ப ழம்பழுக்கும் - மகிழ்ந்துவாய்
தின்னச்சு வையிருக்கும் - மலர்ந்த
பூவும்க னியும்பொ ழியும்செந் தேனும்
போவார டிவழுக்கும் - (வெ. கோ. வ. சிந்து. தொடை.ப. 281)
ஆனந்தக் களிப்பு: ஆனந்தக் களிப்பில் தனிச் சொற்கள் ஈரசைச் சொல்லாக வரும்.
காட்டு : ஆனந்தக் களிப்பு
-
ஆதிசி வன்பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன கத்தியன் என்றோர்
வேதியன் கண்டும கிழ்ந்தே - நிறை
மேவும்இ லக்கணம் செய்துகொ டுத்தான். (பா. கவி.ப. 166)
இலாவணி : இலாவணியில் தனிச்சொல் ஈரசைச் சீராக வரும்.
காட்டு : இலாவணி
-
செஞ்சடை விரித்துத்தவம் துஞ்சிடாதிருக்கும் ஈசன்
தெரிசனம் தன்னைமதன் கண்டுகண்டு - அப்போ
அஞ்சாமல் மலர்க்கணையைப் பஞ்சபாணனும் விடவே
அரனார் அதிககோபம் கொண்டு கொண்டு - (தொடை. ப. 285)
‘சித்தராரூடச் சிந்து’ என்ற நூலில் உள்ள சிந்துப் பாடல்களில் பெரும்பாலும் மூவசைச் சீர்களே தனிச்சொற்களாக வருகின்றன. நாலசைத் தனிச் சொல்லொடு ஐயசைத் தனிச்சொற்களும் அதில் அரிதாக வந்துள்ளன.
காட்டு : சித்தராரூடச் சிந்து
-
திருமருதூர் வளரும் - நாகலிங்கர்
சீர்பாத கமலங்கள் சென்னியில் வைத்து
மருவும் சித்தராரூடப் - பொருளினை
வகுத்துச்சொல் வேனிந்த மகிதலத்தில்
அண்டர்பணி கர்த்தனார் - படைத்ததனில்
ஆகாதசீவசெந் தனேக முண்டாம்
விண்டுரைக்கக் கேளுமினி - நல்லபாம்பு
விரியன் வழலை கொம்பேறி மூக்கன்
குருமலரடி வணங்கி - வகையாகக்
கூறுகின் றேனிந்தக் குவலயத்தில்
மரைமலர்ப் பொகுட்டுறைவோன் - பயந்தருள்
மகவென வந்துதித்த மாதவத்தினோன்.
இங்கு எடுத்துக் காட்டிய நெண்டிச்சிந்து, வளையற்சிந்து, கும்மி, ஒயிற்கும்மி, ஆனந்தக் களிப்பு, இலாவணி முதலியன சிந்தின் வகைகள் என்பது கருதத் தக்கது. எனவே சிந்துப் பாடல்களில் வரும் தனிச் சொற்கள் ஈரசை, மூவசைச் சீர்களாக அமைதல் பெரும்பான்மை என்பதும், நாலசைச் சீர்களும் தனிச்சொல்லாகச் சிறுபான்மை வரும் என்பதும் பெறப்பட்டன.
‘உம்’ என்ற மிகையால் ஓரசைத் தனிச் சொற்களையும், அரிதாக வரும். ஐயசைத் தனிச்சொற்களையும் கொள்ள வைத்தார் என்க.
----
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

