சிந்துப்பாவியல்

19.
-
மூன்றும் நான்கும் ஐந்தும் ஏழும்
என்றொரு சீர்க்கண் இயலும் அசைகளால்
‘தகிட’ ‘தகதிமி’ ‘தகதகிட’ என்றும்
‘தகிட தகதிமி’ என்றும் அமைந்து
சிந்துக் குரிய சீர்கள் நடக்கும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் மும்மை நடையுடைய பாடல்களும், நான்மை நடையுடைய பாடல்களும், ஐம்மை நடையுடைய பாடல்களும், எழுமை நடையுடைய பாடல்களும் உள்ளன. அருகிய வழக்காக ஒன்பான்மை நடையுடைய சிந்துப் பாடல்களும் உள்ளன.
ஒரு சிந்துப் பாடல் அதன் ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று அசைகள் இருக்கும்.
எடுத்துக் காட்டாக ‘ஆறுமுக வடிவேலனே’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம்.
ஆ று மு க வ டி வே ல வ னே க லி யா ண மும் செய் ய வில் லை . . . சற் றும் அச் ச மில் லா ம லே கைச் ச ர சத் துக் க ழைக் கி றா யென் ன தொல் லை . . . . .இது மும்மை நடைப்பாடல். இதில் ‘ஆறுமு கவடி வேலவ’ என்பன போன்ற பகுதிகள் தாளத்தின் ஒவ்வோர் எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன. அவை ஒவ்வோன்றும் ஒவ்வொரு சீராகக் கொள்ளப்படும். இரண்டாம் வரியில் உள்ள லை என்பது இசையளவில் நீண்டு ஒரு சீராகிறது. நான்காம் வரியில் உள்ள லை இசையளவில் நீண்டு இரண்டு முழுச்சீர்களாகிறது. இப்படி மிகுதியாக நீளும் இசை நீட்டங்கள் பெரும்பாலும் அரையடி இறுதிகளிலும், அடியிறுதிகளிலும் மட்டுமே காணப்படும்.
ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம். அவை தனி உயிராகவோ, மெய்யின் மேலேறிய உயிராகவோ இருக்கும். அடியிறுதி, அரையடி இறுதி இடங்களில் தவிரப் பெரும்பாலான இடங்களில் ஒரு சீரில் மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம். அவை ஏன் மும்மூன்றாக உள்ளன. ஏன் நந்நான்காக இல்லை? ஏனென்றால், இது மும்மை நடைப்பாடல், ‘தகிட’ என்ற தாளக் கருவியின் சொல்லுக்கேற்றபடி மும்மூன்றாகத் தான் ஒவ்வொரு சீரும் நடக்கும்.
‘தெள்ளுதமிழுக்கு’ என்ற பாடலில் ஒவ்வொரு சீரும் நான்கு அசை உடையதாக உள்ளது. எனவே இது நான்மை நடைப்பாடல். ‘சீர் வளர் பசுந்தோகை’ என்ற பாடலின் ஒவ்வோரு சீரிலும் ஐந்து அசைகளும், ‘பொன்னுலவு’ என்ற பாடலில் சீர்தொறும் ஏழு அசைகளும் உள்ளன. இவை முறையே ஐம்மை, எழுமை, நடைகளுக்குரியன. (இப்பாடல்களை பின் இணைப்பில் காணலாம்).
‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலைப் பாடும்போது மத்தளம் முதலிய தாளக் கருவிகளில் பாடலின் ஒரு சீரில் உள்ள மூன்று அசைக்களுக்கு ஏற்றவாறு ‘தகிட’ என்றோ கிடதொம்’ என்றோ, ‘தொம்கிட’ என்றோ, ‘ததீம்’ என்றோ, ‘தீம்த’ என்றோ வாசிப்பார்கள். இங்கு கூறிய ‘தகிட’, ‘கிடதொம்’, ‘தொம்கிட’, ‘ததீம்’, ‘தீம்த’ முதலியன மும்மை நடையின் சொற்கட்டுகள். இவ்வாறே நான்மை நடைக்கும், ஐம்மை நடைக்கும், எழுமை நடைக்கும், ஒன்பான்மை நடைக்கும் சொற்கட்டுகள் உள்ளன.
-
மும்மை நடை : தகிட, கிடதொம், தொம்கிட, ததீம், தீம்த முதலியன
நான்மை நடை : தகதிமி, ததிங்கிண, தாதீம், தகதீம், தாம்கிட, ததீம்த முதலியன
ஐம்மை நடை : தகதகிட, தரிகிடதொம், தகதீம்த, தாதீம்த, தோம்கிடதொம், ததீம்தா முதலியன
எழுமை நடை : தகிடதகதிமி, தீம்ததகதிமி, ததீம்தாதிமி, தகிடதாம்தக, தகிடதகதீம் முதலியன
ஒன்பான்மை நடை : தகதிமிதகதகிட, தாதீம்தகிடதீம் முதலியன.
காட்டு :
-
ஆறுமு - தகிட - மும்மைச்சீர்
தெள்ளுதமி - தகதிமி - நான்மைச்சீர்
மனமகிழு - தகதகிட - ஐம்மைச்சீர்
முகில்பெருஞ்சி- தகிடதகதிமி - எழுமைச்சீர்
20. விரைவு நடை
- விரைவொடு நடக்கும் மும்மையும் நான்மையும்
ஓரோவழி வருதல் உண்டென மொழிப
விளக்கம் : முன்பு சொல்லப்பட்ட நான்கு வகைத் தாளநடைகளோடு சிறுபான்மை விரைவு நடைகளும் வரும். மும்மை நடையிலும், நான்மை நடையிலும் அவை இயல்பாக நடப்பதிலும் இருமடங்கு விரைவாக நடப்பதுண்டு. அப்போது தாளத்தின் ஒவ்வோர் இடைவெளியிலும் இருமடங்கு அசைகள் நிற்கும்.
காட்டு : ஆதிதாளம் விரைவு மும்மை நடை
வா . னரங்கள் . கனிகொடுத்து . மந்தியொடு . கொஞ் . சும் . . . மந் . திசிந்து . கனிகளுக்கு . வான் . கவிகள் . கொஞ் . சும் . . . (திருக்குற். குற. 54)இதுவொர் அடி. இதில் எட்டு சீர்கள் உள்ளன. ஒவ்வொரு சீரிலும் ஆறு அசைகள் உள்ளன. மூன்று அசை இருந்தால் ‘தகிட’ என்ற மும்மை நடை நடக்கும். இது ‘தகிட தகிட’ என்று நடக்கும் மும்மையைப் போல் இருமடங்கு விரைவாக நடப்பதால் இது விரைவு மும்மை எனப்படும். இதனை மும்மை நடையிலும் பாடலாம். அப்படிப் பாடினால் பாட்டு மெல்ல நடக்கும். குறத்தி மலைவளம் கூறி ஆடும் இப்படிச் ச ¢ல பாடலகள் விரைவு மும்மையில் நடக்கும்.
நான்மையும் இப்படி விரைவு விரைவு நடை நடப்பதுண்டு. அது ‘தகதிமி தகதிமி’ என்று நடக்கும். அது அரிதாக வரும். ‘கண்ணாயிரம்’ என்ற அண்ணாமலைச் ரெட்டியார் காவடிச் சிந்தில் காண்க. (பாடலைப் பின் இணைப்பில் பார்க்க).
கன வயி ர . ப் படை அவன்மக ளை.ப் புணர் - என்றும்
கழு கும லை . ப் பதி யனு தின மு.ற் றிடு - என்றும்
வரும் சீர்களில் இந்த விரைவு நான்மை ஒலியைக் கேட்கலாம்.விரைவு நடையை ‘இரட்டித்து ஏகல்’ என்பதும் ‘வாரநிலம் வளர்த்தல்” என்பதும் பண்டைய மரபு.
----------
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

