முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 225
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 225
உஜ்ஜைனிக்கு வரும் அசல் கிரேக்கர்களைப் பார்த்தேன். அவர்களுடைய பெரிய பெரிய வியாபாரச் சாலைகளையும் பார்த்தேன். சகரர்கள், அபீர்கள் முதலிய பல குடும்பங்களோடும் பழக முடிந்தது. நூற்றுக் கணக்கான வருஷங்களாக உஜ்ஜைனியிலும், குஜராத்திலும், கத்தியவாரிலும் தங்கிப்போய்விட்ட அன்னிய நாட்டினர்கள் பலரையும் பார்க்கமுடிந்தது. ஆரஞ்சு நிறமும் ரோமமில்லாத கன்னங்களும் உருண்டைக் கண்களுமுடைய மங்கோலியர்களையும் பார்த்தேன். அவர்கள் யுத்தத்திலே கெட்டிக்காரர்களாய் இருக்கலாம். ஆனால் அறிவுப் பிரகாசமோ புத்திசாலித்தனமோ அவர்களிடம் நிறைந்திருப்பதாய்த் தெரியவில்லை. இவ்விதம் விதம் விதமான மனிதர்களைப் பார்ப்பதற்குரிய இடம் பௌத்த மடங்கள். உஜ்ஜைனிக்கு வெளியே பௌத்த மடங்கள் பல இருந்தன. என் மாமா வீட்டினரும் பௌத்த மதத்தைத் தழுவியவர்களே. மேலும் எத்தனையோ நாகர் குலத்தினர் பிக்ஷு க்களாகி அந்த மடங்களிலே தங்கி இருந்தனர். ஆகையால் அடிக்கடி அங்கே செல்வதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருமுறை பரூகச்சத்திற்கும் போய் வந்திருக்கிறேன்.
ஏட்டுப் படிப்பை முடித்துக்கொண்டதும், நான் நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதன் மூலம் எனது அறிவைப் பெருக்கிக்கொள்ள விரும்பினேன். அந்தச் சமயத்தில் விதர்ப்ப தேசத்திலே அஜந்தா மடம் என்ற பெயரால் ஒரு பிரசித்தி பெற்ற மடம் இருப்பதாகவும், அங்கே உலகத்திலுள்ள எல்லா நாடுகளையும் சேர்ந்த பிக்ஷு க்களும் வசிப்பதாகவும் கேள்விப்பட்டேன். உடனே அங்கு சென்றேன்.
வீட்டைவிட்டு வெளியேறி இதுவரை நான் சென்ற பொழுதெல்லாம் நண்பர்களின் துணையுடனும், வழிப் பயணத்திற்கு வேண்டிய உணவுடனுமே சென்றேன். சென்ற இடங்களிலெல்லாம் என்னை ஆதரிப்பவர்கள் இருந்தார்கள். வழித்துணையோ, கையில் உணவுப் பொருளோ, இல்லாமல் முன்பின் தெரியாத பிரதேசத்திற்கு நான் புறப்பட்டது இதுதான் முதல் தடவை. வழியிலே திருடர் பயமில்லை. குப்தர்களின் இந்த ஏற்பாட்டிற்காக அவர்கைப் புகழத்தான் வேண்டும். ஆனால் குப்தர்களின் ஆட்சியில், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் சுகவாழ்வும் செழிப்பும் பெற்று விளங்குவதால், வழிப்பறியும் கொள்ளையும் ஏற்பட அவசியமில்லாமல் போய்விட்டது என்று தவறாகக் கருதிக் கொள்ளக் கூடாது. வரி விதித்து வசூல் பண்ணுவதிலே முன்னைய எல்லா அரசர்களையும் இந்த குப்தர்கள் மிஞ்சி விட்டார்கள். அரச மாளிகைகள் கட்டுவதில், இவர்களுக்கு முன்னால் எப்பொழுதும் இவ்வளவு பணம் செலவிடப்பட்டதில்லை. அதை அலங்கரிப்பதற்கு இவர்கள் செய்த செலவோ, எல்லை கடந்தது. மலைகளையும், நதிகளையும், குளங்களையும், ஏன் கடலையும் கூட அப்படியே முழு உருவத்தில் கொண்டுவந்து, தங்கள் மாளிகைக்குப் பக்கத்திலே வைக்க முயற்சித்தார்கள். இவர்கள் தயாரித்த போலிவனம், உண்மையிலேயே வனமாகக் காட்சியளித்தது. அங்கே கூண்டுகளில் பயங்கர மிருகங்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. மான் மரை போன்ற சாது மிருகங்கள், வெளியே சுற்றித் திரிந்தன. அவர்கள் உருவாக்கிய செயற்கை மலையோ, நதி ஊற்றுக்களுக்கும், அருவிகளுக்கும் பிறப்பிடமான இயற்கை மலையாகவே காட்சியளித்தது. குளங்களெல்லாம் சிறிய சிறிய கால்வாய்களால் இணைக்கப்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 223 | 224 | 225 | 226 | 227 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், அங்கே, பௌத்த, பார்த்தேன் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

