முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 223
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 223
இதெல்லாம் எதற்காக? சுவை நிறைந்த உணவு, மது, மாமிசம் இவைகளுக்காகத்தானே? தேசத்தின் அழகிய யுவதிகளையெல்லாம் அந்தப்புரத்தில் கொண்டு போய் நிரப்புவதற்குத்தானே? உடல் வருந்த உழைக்கும் விவசாயி, தொழிலாளர்களின் உழைப்பின் பயனை, சுக போகத்திலே தண்ணீரைப்போல் வீணாக்குவதற்குத்தானே? இவைகளைச் செய்வதற்காக இந்தக் குப்த அரசர்களை நீங்கள் தர்ம ரட்சகர்கள் என்று பாராட்டுகிறீர்கள். குப்தர்களும் தங்களை வைக்ஷ்ணவர்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். பிராமணர்களெல்லாம், அவர்களை விஷ்ணுவின் அம்சம் என்று கருதுகிறார்கள். குப்தர்களுடைய நாணயங்களிலே லெட்சுமியின் உருவம் பொறிக்கப்படுகிறது. பிரஜைகளைப் பட்டினிபோட்டுக் கொள்ளையடித்துப் பணத்தைக் கொண்டு தேவாலயங்களை ஏற்படுத்தி, விஷ்ணுவின் உருவச் சிலைகளைச் செய்து வைக்கிறார்கள். இவற்றின் மூலம் குப்தவம்சத்தின் ஆட்சியை நிரந்தரமாக்கிவிட முயல்கிறார்கள்.”
“ஆனால், சுபர்ண! நீ என்ன செய்கிறாய்? அரசனுக்கு விரோதமாகக் கசப்பான பிரசாரம் அல்லவா இது?”
“ஆச்சாரிய! இன்று உங்கள் முன்னிலையில் மட்டும் இப்படிப் பேசுகிறேன். பின்னால் ஒரு சமயம் வரும். அப்போது பரம பட்டாரகன், ராஜாதிராஜன் குமார குப்தனின் முன்னிலையிலும் சொல்லுவேன். இந்தச் சூழ்ச்சியையும் அக்கிரமத்தையும் சகித்துக்கொண்டிருப்பது, என் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் அந்தக் காலம் ரொம்பத் தூரத்தில் இருக்கிறது. ஆச்சாரியரே! நீங்கள் அஸ்வகோஷைப் பின்பற்றி, அவர் சென்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பது எனது ஆசை.”
“ஆனால் குழந்தாய்! நான் ஒரு வெறும் கவிஞன். அஸ்வகோஷ் மகாத்மா. அவருக்கு இந்த உலகத்தின் சுகங்களெல்லாம் துச்சம். எனக்கோ விக்கிரமாதித்யனின் அந்தப்புரவாசிகளைப் போல அழகிகள் வேண்டும். செந்நிறத் திராட்சை மது வேண்டும்! பெரிய மாளிகை வேண்டும். எண்ணற்ற ஏவலாளர்கள் வேண்டும். இத்தனை ஆசைகளையும் வைத்துக்கொண்டு-நான் எப்படி அஸ்வகோஷாக முடியும்? ரகுவம்சத்திலே குப்தர்களை ரகுவம்சத்தினர் எனப் புகழ்ந்து பாடினேன். அதிலே மகிழ்ந்து போன விக்கிரமாதித்தியன், இந்தப் பெரிய மாளிகையையும், காஞ்சனமாலாவையும் எனக்கு அளித்தான். பதினைந்து வருடங்கள் என்னோடு வாழ்ந்த பிறகும் கூட தன்னுடைய கூந்தலிலே என்னையும் மறைத்துக் கொள்ளும் ஆற்றல் படைத்திருக்கிறாள், அந்தக் கிரேக்க அழகி, இப்போது ‘குமார சம்பவத்’ தைத் தொடங்கி இருக்கிறேன். இது என்னென்ன பரிசுகளை எனக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது பார்!”
“என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆச்சாரியரே! நீங்கள் ரகுவம்சத்தையும் குமார சம்பவத்தையும் எழுதாமல் ‘புத்த சரித’த்தையும் ‘சௌந்தரியானந்த’ த்தையும் எழுதியிருந்தால், பட்டினியால் மடிந்து போயிருப்பீர்களா? உலக சுகங்களிலிருந்து ஒதுக்கப்பட்டியிருப்பீர்களா? அரசர்களை முகஸ்துதி செய்யா விட்டால், உங்கள் வாழ்க்கை சுகமற்றதாய் இருக்குமென்று நீங்கள் கருதுவது வெறும் மயக்கம். நீங்கள் வருங்காலக் கவிஞர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டிச் செல்கிறீர்கள். எல்லோரும்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 221 | 222 | 223 | 224 | 225 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேண்டும், நீங்கள், கொண்டு, என்று - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

