முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » திருப்புகழ் »
பாடல் 938 - சிங்கை - காங்கேயம்
திருப்புகழ் - பாடல் 938 - சிங்கை - காங்கேயம்
ராகம் - ....; தாளம் -
|
தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான |
|
சந்திதொறு நாண மின்றியகம் வாடி உந்திபொரு ளாக ...... அலைவேனோ சங்கைபெற நாளு மங்கமுள மாதர் தங்கள்வச மாகி ...... அலையாமற் சுந்தரம தாக எந்தன்வினை யேக சிந்தைகளி கூர ...... அருள்வாயே தொங்குசடை மீது திங்களணி நாதர் மங்கைரண காளி ...... தலைசாயத் தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி என்றுநட மாடு ...... மவர்பாலா துங்கமுள வேடர் தங்கள்குல மாதை மங்களம தாக ...... அணைவோனே கந்தமுரு கேச மிண்டசுரர் மாள அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல சிங்கைநகர் மேவு ...... பெருமாளே. |
காலையும் மாலையும் வெட்கம் இல்லாமல் உள்ளம் சோர்வுற்று வயிறே முக்கிய காரியமாக அலைச்சல் உறுவேனோ? தினந்தோறும் அச்சம் கொண்டு, உடல் அழகுள்ள விலைமாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக. தொங்குகின்ற சடையின் மேல் சந்திரனை அணிந்துள்ள தலைவர், மங்கையும் போர்க்களத்தை ஆள்பவளுமான காளி நாணித் தலை குனிய, தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடனம் ஆடிய சிவபெருமானின் குமாரனே, பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளியை மங்களகரமாகத் தழுவியவனே, கந்தனே, முருகேசனே, நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் இறக்க, அந்த கூரிய வேல் கொண்டு எறிந்து அழித்தவனே, (கச்சி) ஏகாம்பரநாதர், கயிலாய நாதர் ஆகிய சிவபெருமானின் பிள்ளையே, கூரிய வேலாயுதத்தை உடையவனே, காங்கேய* நகரில் வாழும் பெருமாளே.
* காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 936 | 937 | 938 | 939 | 940 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தந்ததன, சிவபெருமானின், கூரிய, கொண்டு, காளி, நாதர், காங்கேயம், பெருமாளே

