முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » திருப்புகழ் »
பாடல் 937 - சிங்கை - காங்கேயம் -
திருப்புகழ் - பாடல் 937 - சிங்கை - காங்கேயம் -
ராகம் - ....; தாளம் -
|
தந்ததன தந்த தந்ததன தந்த தந்ததன தந்த ...... தனதான |
|
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற தண்குவளை யுந்து ...... குழலாலுந் தண்டரள தங்க மங்கமணி கின்ற சண்டவித கும்ப ...... கிரியாலும் நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து நம்பிவிட நங்கை ...... யுடனாசை நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று நன்றுமயில் துன்றி ...... வரவேணும் கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி கந்திகமழ் கின்ற ...... கழலோனே கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள் கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை திண்குயம ணைந்த ...... திருமார்பா செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த சிங்கையில மர்ந்த ...... பெருமாளே. |
வண்டுகள் மகிழ்ந்து, நின்று ¡£ங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும், குளிர்ந்த முத்து மாலை, பொன் மாலை ஆகியவற்றை தம்மீது அணிந்துள்ள, வலிமை கொண்ட குடம் போன்ற மார்பகங்கள் மூலமாகவும், விஷம் கொண்ட செயலைப் பொருந்தி, (நீயே) அடைக்கலம் என்று சொல்லி வந்து நான் நம்பும்படி நடிக்கும் அத்தகைய மங்கையுடன் ஆசை கொண்டு, நட்பு வைக்கின்ற என்னைக் காத்தருள, நீ இந்த நாளே, தீய வினைகளை அழித்து, நன்மை தரும் மயிலில் பொருந்தி வந்தருள வேண்டும். தாமரை மலர், கொன்றை மலர், தும்பை மலர், மகிழம்பூ இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவனே, வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் (பேய், நாய், நரி, பருந்து முதலியவற்றின்) கூட்டங்கள் காணும்படி சண்டை செய்யும் ஒளி வீசும் வேலை உடையவனே. பண் நிறைந்த சொல்லை அமைந்துள்ள எங்கள் குறப்பெண்ணாகிய வள்ளியின் வலிய மார்பை அணைந்த அழகிய மார்பனே, செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் சிறப்புடன் மிளிரும் சிங்கை எனப்படும் காங்கேயம்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 935 | 936 | 937 | 938 | 939 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கின்ற, மலர், தந்த, தந்ததன, மாலை, மூலமாகவும், கொண்ட, உடையவனே, என்ற, விளங்கும், பொருந்தி, பெருமாளே, வந்து, காங்கேயம், கொன்றை, ணங்கள், சிங்கை, செய்யும்

