திருப்புகழ் - பாடல் 934 - சேலம்
ராகம் - கானடா
தாளம் - ஆதி
|
தனதன தானத் தனதன தானத் தனதன தானத் ...... தனதான |
|
பரிவுறு நாரற் றழல்மதி வீசச் சிலைபொரு காலுற் ...... றதனாலே பனிபடு சோலைக் குயிலது கூவக் குழல்தனி யோசைத் ...... தரலாலே மருவியல் மாதுக் கிருகயல் சோரத் தனிமிக வாடித் ...... தளராதே மனமுற வாழத் திருமணி மார்பத் தருள்முரு காவுற் ...... றணைவாயே கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் தொடுகும ராமுத் ...... தமிழோனே கிளரொளி நாதர்க் கொருமக னாகித் திருவளர் சேலத் ...... தமர்வோனே பொருகிரி சூரக் கிளையது மாளத் தனிமயி லேறித் ...... திரிவோனே புகர்முக வேழக் கணபதி யாருக் கிளையவி நோதப் ...... பெருமாளே. |
இரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை நிலவு வீசுவதாலும், பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும், குளிர்ச்சியுள்ள சோலையில் குயில் ஒன்று சோகமாய்க் கூவுவதாலும், புல்லாங்குழல் ஒப்பற்ற (சோக) ஓசையைத் தருவதாலும், உன்னைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்தப் பெண் தன் இரண்டு கயல் மீன் போன்ற கண்கள் சோர்வடைய, தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று தளர்ச்சியுறாமல், அவளின் நொந்த மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ, உன் அழகிய ரத்ன மணிமாலை அணிந்த மார்பிடத்தே, அருளே உருவான முருகனே, நீ வந்து அவளை இறுக்க அணைவாயாக. கிரெளஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி, அது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமரனே, இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழுக்குப் பெருமானே, பெரும் ஜோதி ஸ்வரூபனான சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, லக்ஷ்மிகரம் பொருந்திய சேலம் என்ற பதியில் வீற்றிருப்பவனே, போருக்கு எழுந்த ஏழு கிரிகளும், சூரனும், அவன் சுற்றத்தாரும் இறக்க, ஒப்பற்ற மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்தவனே, புள்ளியை உடைய யானையின் முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு இளையவனாகிய அற்புதப் பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், குயில், புல்லாங்குழல், மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு முதலியவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 932 | 933 | 934 | 935 | 936 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஒப்பற்ற, தானத், தனதன, என்ற, புல்லாங்குழல், தென்றல், பெருமாளே, சேலம், குயில்

