திருப்புகழ் - பாடல் 757 - கடம்பூர்
ராகம் - ....;
தாளம் -
|
தானனம் தானான தானனம் தானான தானனம் தானான ...... தனதான |
|
வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண மால்கடந் தேபோமெ ...... னியலூடே வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார வாசகம் போல்கூறி ...... யணைமீதே சேருமுன் காசாடை வாவியும் போதாமை தீமைகொண் டேபோமெ ...... னடமாதர் சேரிடம் போகாம லாசுவந் தேறாமல் சீதளம் பாதார ...... மருள்வாயே நாரணன் சீராம கேசவன் கூராழி நாயகன் பூவாயன் ...... மருகோனே நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட சூரியன் தேரோட ...... அயிலேவீ தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே. |
இங்கே வாருங்கள், என் வீடு அருகில் தான் இருக்கின்றது, எனக்குப் பணம் விஷம் மாதிரி. உம்முடைய ஆசையை என்னுடைய அன்புடனே கலந்து தீர்த்துக் கொண்டே போங்கள். பெண்களே வாருங்கள், பாயைப் போடுங்கள் என்று மரியாதைப் பேச்சுக்கள் போன்றவைகளைப் பேசி, படுக்கையில் சேர்வதற்கு முன்பாக பொருளையும், ஆடைகளையும் வேண்டிய அளவுக்குப் பறித்தும், அவை போதாது என்று குற்றம் கூறி ஓடிப் போம் என்று அடம் பிடிக்கும் விலைமாதர்கள் உள்ள இடத்தில் நான் போகாமல், குற்றங்கள் வந்து என்னைச் சேர்ந்து பெருகாமலும், உனது குளிர்ந்த திருவடித் தாமரைகளைத் தந்து அருள்வாயாக. நாராயணன், ஸ்ரீராமன், கேசவன், கூர்மை கொண்ட சக்ராயுதத்தைத் தரித்த தலைவன், பூலோகத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த கண்ணபிரானின் மருகனே, நாரதர், தும்புரு ஆகியோர் இசை பாட, நின்று ஆடுகின்ற (ஊர்த்துவ) நடனத்தைச் செய்கின்ற திருவடியை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே, சூரனும், அவன் வருத்தும் செயல்களும் கடலில் போய் (மாமரமாகக்) கிடந்தே அழியவும், சூரியனுடைய தேர் (பழைய முறைப்படி) ஓடவும் வேலைச் செலுத்தியவனே, பரிசுத்தமான நறு மணம் வீசும் காவேரி நதியுடன் சேர்கின்ற, ஒள்ளிய சிற்றாறு சூழ்கின்ற கடம்பூரில்* வீற்றிருக்கும், தேவர்கள் பெருமாளே.
* கடம்பூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 755 | 756 | 757 | 758 | 759 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்று, தானான, தானனம், அருகில், வாருங்கள், காவேரி, கேசவன், கடம்பூர், பெருமாளே

