திருப்புகழ் - பாடல் 705 - கோடைநகர்
ராகம் - ...; தாளம்
-
|
தானா தானா தானா தானா தானா தானா ...... தனதானா |
|
ஏறா னாலே நீறாய் மாயா வேளே வாசக் ...... கணையாலே ஏயா வேயா மாயா வேயா லாமே ழோசைத் ...... தொளையாலே மாறா யூறா யீறாய் மாலாய் வாடா மானைக் ...... கழியாதே வாராய் பாராய் சேரா யானால் வாடா நீபத் ...... தொடைதாராய் சீறா வீறா ஈரேழ் பார்சூழ் சீரார் தோகைக் ...... குமரேசா தேவா சாவா மூவா நாதா தீரா கோடைப் ...... பதியோனே வேறாய் மாறா யாறா மாசூர் வேர்போய் வீழப் ...... பொருதோனே வேதா போதா வேலா பாலா வீரா வீரப் ...... பெருமாளே. |
காளையும் பசுவும் கலந்து வரும் காட்சியினாலும், சாம்பலாகியும் அழிவுபடாத மன்மத வேள் ஏவுகின்ற மணமுள்ள புஷ்ப பாணத்தாலும், பொருந்திப் பொருந்தி கவலையால் வருந்தி புல்லாங்குழலில் உண்டாகும் ஏழு சுரங்கள்கொண்ட இசையைத் தரும் தொளைகளாலும், எழிலும் நிறமும் மாறுதல் உற்று, துன்பமுற்று, உயிரே முடிவடைந்ததுபோல் ஆகி, ஒரே மோக மயக்கமாய் வாடுகின்ற மான்போன்ற இந்தப் பெண்ணை நீ ஒதுக்காமல், வந்து பார்த்துவிட்டு இவளுடன் சேர்வதற்கு மனம் இல்லை என்றாலும், உனது வாடாத கடப்ப மாலையையாவது தந்து அருளுக. சீறி எழுந்து வீறுடன் மேலே பறந்து பதினான்கு உலகங்களையும் வலம் வந்த, சிறப்பு மிகுந்த, மயில் வாகனக் குமரேசா, தேவனே, இறப்பு இல்லாத மூப்பு அடையாத நாதனே, ¨தரியம் உடையவனே, கோடைப் பதியில்* வீற்றிருப்பவனே, வேறுபட்ட மாறுபட்ட வழியில் சென்றவனான பெரிய சூரன் வேரற்று அடியோடு விழும்படி சண்டை செய்தவனே, பிரமனுக்கு அறிவு ஊட்டியவனே, வேலனே, பாலனே, வீரனே, வீரம் வாய்ந்த பெருமாளே.
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.காளையும் பசுவும் சேர்ந்து வருதல், மன்மதன், மலர்க்கணை, புல்லாங்குழல் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 703 | 704 | 705 | 706 | 707 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானா, கோடைப், பெருமாளே, பசுவும், குமரேசா, காளையும், வாடா, மாயா, வேயா, மாறா, கோடைநகர்

