திருப்புகழ் - பாடல் 640 - கதிர்காமம்
ராகம் - தோடி;
தாளம் - ஆதி - 2 களை
|
தனதன தனதன தனதன தனதன தானத் தனந்தந் ...... தனதான |
|
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர் காமத் தரங்கம் ...... மலைவீரா கனகத நககுலி புணரித குணகுக காமத் தனஞ்சம் ...... புயனோட வடசிக ரகிரித விடுபட நடமிடு மாவிற் புகுங்கந் ...... தவழாது வழிவழி தமரென வழிபடு கிலனென வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான் அடவியி ருடியபி நவகும ரியடிமை யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே அயிலவ சமுடன ததிதிரி தருகவி யாளப் புயங்கொண் ...... டருள்வோனே இடமொரு மரகத மயில்மிசை வடிவுள ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே இதமொழி பகரினு மதமொழி பகரினு மேழைக் கிரங்கும் ...... பெருமாளே. |
கடகட என்று சப்திக்கும் பறைகளின் பேரொலியும் அடங்குமாறு வரிப்புலிகளின் ஒலி அதிர்கின்ற கதிர்காமத்துக் கடவுளே, அலைகள் வீசும் கடலினை உனது வேலால் அலைவுறச் செய்த வீரனே, பெருமையையும் கோபத்தையும் உடைய மலை போன்ற யானை வளர்த்த தேவயானையை மணந்த இனிய குணத்தோனே, என் இதய குகையில் இருக்கும் குகனே, மன்மதனின் தந்தை திருமால் பயப்பட, பிரம்மா ஓடிட, வட மேரு மலைச் சிகரம் தவிடுபொடியாக நடனம் செய்யும் குதிரை போன்ற மயில் மீது ஏறி வருகின்ற கந்தக் கடவுளே, தவறாமல் வழிவழியாக வந்த உறவினன் என்னும்படி யான் வழிபடுகின்றவனாக இல்லேன் எனினும் எனது மூவாசைகளும் துன்பங்களும் அழிந்து ஒழிந்திடுமோ? காட்டில் சிவமுனிவர் உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி* வள்ளிக்கு அடிமையாகிச் சென்று அவள் இருந்த தினைப்புனத்துக்குப் போய், தளர்ச்சி அடைந்தவனே, மயக்கத்துடன் ஒருநாள் காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள** வேலினைத் தோளில் ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே, தம் உடலின் இடது பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள ஏந்திழையாம் பார்வதிக்கு இடம் தந்தவரான சிவபிரானின் செல்வனே, அடியேன் இனிய மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப் பேசினாலும், இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே.
* சிவமுநிவராக உருவெடுத்த திருமால் காட்டில் தவம் செய்த போது திருமகள் மானின் உருக்கொண்டு எதிர்ப்பட, முநிவர் திருஷ்டி மான் மீது பட்டு, மான் கருவுற்று வள்ளிக்கிழங்குக் குழியில் பெண் குழந்தையை ஈன்றுவிட்டு ஓடியது. வேடர் தலைவன் குழந்தையைக் கண்டு வள்ளி எனப் பெயரிட்டான்.
** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து கவி தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 638 | 639 | 640 | 641 | 642 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதன, மீது, திருமால், காட்டில், சென்று, மான், தோளில், பொய்யாமொழிப், இனிய, போன்ற, காமத், கடகட, மரகத, பகரினு, கடவுளே, பெருமாளே, செய்த

