திருப்புகழ் - பாடல் 474 - சிதம்பரம்
ராகம் - ...;
தாளம் -
|
தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன ...... தந்ததான |
|
கரிய மேக மெனுங்குழ லார்பிறை சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர் கமுக க்¡£வர் புயங்கழை யார்தன மலைக ளாஇ ணையுங்குவ டார்கர கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை வரிய பாளி தமுந்துடை யாரிடை துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல் மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர் மயில்கள் போல நடம்புரி வாரியல் குணமி லாத வியன்செய லார்வலை மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய் சரியி லாத சயம்பவி யார்முகி லளக பார பொனின்சடை யாள்சிவை சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே சதப ணாம குடம்பொடி யாய்விட அவுணர் சேனை மடிந்திட வேயொரு தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா அரிய மேனி யிலங்கையி ராவணன் முடிகள் வீழ சரந்தொடு மாயவன் அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும் அழகு சோபி தஅங்கொளு மானன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே. |
கரு நிறம் வாய்ந்த மேகம் என்று சொல்லும்படியான கூந்தலை உடையவர். பிறை போலவும் வில் போலவும் விளங்கி அழகு கொண்ட புருவங்களை உடையவர். கயல் மீனை ஒத்த கண்கள் அம்பு போன்று செயலை ஆற்றும் தொழிலினர். சந்திரன் போன்ற முகம் உடைய விலைமாதர்கள். கமுகு போன்ற கழுத்தை உடையவர். மூங்கில் போன்ற தோள்களை உடையவர். மார்பகங்கள் மலைக்கு இணையான திரட்சி உடையவர். தாமரை போன்ற கைகள், வாழை போன்ற தொடைகளை உடையவர். கள்ளத்தனமான நடையால் கைக்கொண்ட பொன்னால் வாங்கப்பட்ட பட்டுப் புடவைகளால் முன்னிட்டு விளங்கும் உடைகளைத் தரித்தவர். இடுப்பு உடுக்கை போலவும் நூல் போலவும் உள்ள அழகியர். அழகு நிறைந்த பெண்குறி நறு மணம் வீசும் அரம்பை போன்றவர். பொருளுக்காகக் கூடுதலை உடைய பொது மாதர் மயிலைப் போன்று நடனம் செய்பவர். நல்ல தன்மையான குணம் இல்லாத வியப்பான செயல்களைக் கொண்டவர் ஆகிய விலைமாதர்களின் வலையில் மனம் கலக்குண்டு அடியேன் அழிவுறலாமோ? உன்னுடைய அன்பைத் தந்தருள்வாய். தனக்கு ஒப்பில்லாத சுயம்புவான தேவதை, மேகம் போன்ற கூந்தல் பாரத்தை உடையவள், பொன் நிறமான சடையை உடையவளாகிய சிவை, எல்லா உலகங்களுக்கும் மேம்பட்ட அழகு உடையவள் ஆகிய உமை பெற்று அருளிய கந்தவேளே. நூற்றுக் கணக்கான பருத்த மணி முடிகள் பொடியாக, அசுரர்களின் சேனை இறக்க, ஒப்பற்ற நெருப்பைக் கொண்டதுமான வேலைச் செலுத்திய வல்லவனே, செம் பொன் நிற அழகனே, அருமையான உடலைக் கொண்ட இலங்கை அரசனாகிய ராவணன் தலைகள் அற்று விழும்படி அம்பைச் செலுத்திய மாயவனும், பதினான்கு உலகங்களையும் உண்டவனுமாகிய திருமாலின் சிறந்த மருகனே, தேவர்கள் ஓதிப் புகழும் அழகு வாய்ந்த ஒளியை உடையவனே, எழில் வாய்ந்த முகத்தை உடைய தேவதையாகிய தேவயானை, உன் ஆசைக்கு உகந்தவளாகிய மலை நில ஊரில் (வள்ளிமலையில்) வாழ்கின்ற வள்ளி நாயகி ஆகிய இருவருக்கும் அருள் புரிந்து லீலைகள் செய்து, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 472 | 473 | 474 | 475 | 476 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போன்ற, உடையவர், அழகு, போலவும், தனந்தன, வாய்ந்த, உடைய, தானன, ஆகிய, செலுத்திய, உடையவள், போன்று, பொன், மேகம், கந்தவேளே, வாழை, சேனை, ராவணன், தம்பிரானே, முடிகள், கொண்ட

