திருப்புகழ் - பாடல் 256 - திருத்தணிகை
ராகம் - ஆனந்த
பைரவி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
|
தனதன தானம் தனதன தானம் தனதன தானம் ...... தனதான |
|
கலைமட வார்தஞ் சிலையத னாலுங் கனவளை யாலுங் ...... கரைமேலே கருகிய காளம் பெருகிய தோயங் கருதலை யாலுஞ் ...... சிலையாலுங் கொலைதரு காமன் பலகணை யாலுங் கொடியிடை யாள்நின் ...... றழியாதே குரவணி நீடும் புயமணி நீபங் குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் ...... தொழும்வேலா தினைவன மானுங் கநவன மானுஞ் செறிவுடன் மேவுந் ...... திருமார்பா தலமகள் மீதெண் புலவரு லாவுந் தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா தனியவர் கூருந் தனிகெட நாளுந் தனிமயி லேறும் ...... பெருமாளே. |
மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த மாதர்களின் வசைப்பேச்சின் ஒலியினாலும், பெருத்த சங்கின் பேரொலியினாலும், கரையின் மேல் இருந்து கூவுகின்ற மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின் ஓசையாலும், பரந்து விரிந்த கடலின் ஓசையாலும், சிந்தனை அலைகளாலும், கரும்பு வில்லால் கொலை செய்யவல்ல மன்மதன் வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும், கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய இத்தலைவி உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று அழிவுறாமல், குரா மலர்களைத் தரித்துள்ள நீண்ட புயங்களில் அணிந்துள்ள கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக. மலையரசன் மகள் பார்வதி நாயகன் சிவனும், கலைமகள் ஸரஸ்வதியின் நாயகன் பிரம்மனும், லக்ஷ்மியின் நாயகன் திருமாலும் வணங்கி வழிபடுகின்ற* வேலாயுதனே, தினைப் புனத்திலே காவல் காத்த மான் போன்ற வள்ளியும், விண்ணுலகில் மேன்மையான கற்பக வனத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையும் மனம் நிறைந்து அணைக்கும் திருமார்பினனே, நிலமகளாகிய இவ்வுலகின் மீது மதிப்பிற்குரிய புலவர்கள் உலாவும் திருத்தணிகையில் வாழும் ஒளி படைத்த வேலினை உடையவனே, உலக பாசத்தை நீக்கிய உன் அடியார்களின் மிக்க தனிமை நீக்கி அருளி, நாள்தோறும் ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளும் பெருமாளே.
* திருத்தணிகையில் மும்மூர்த்திகளும் வழிபாடு செய்த வரலாறு உண்டு. தணிகைக்கு அருகே ஓடும் நந்தி ஆற்றின் வடகரையில் சிவ சந்நிதியும், தாரகாசுரன் விஷ்ணுவிடமிருந்து கவர்ந்த சக்ராயுதத்தை மீட்டுக் கொடுத்த முருகனை, திருமால் வழிபட்ட விஷ்ணுதீர்த்தம் கோயிலுக்கு மேற்கேயும், சிருஷ்டித் தொழிலில் முருகனிடம் தேர்ச்சி பெற்ற பிரம்மனுக்கான பிரம்மச்சுனை மலை ஏறும் வழியிலும் உள்ளன.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.ஊர்ப் பெண்களின் ஏச்சு, கடல், அலைகள், குயிலோசை, சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 254 | 255 | 256 | 257 | 258 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதன, நாயகன், போன்ற, நாயன், தானம், திருத்தணிகையில், மான், மீது, ஓசையாலும், யாலுங், கலைமகள், பெருமாளே, மன்மதன்

