திருப்புகழ் - பாடல் 255 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம்
-
|
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் ...... தனதான |
|
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங் கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக் கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங் கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத் தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்துன துசித்தங் ...... களிகூரத் தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன் தலத்தினி லிருக்கும் ...... படிபாராய் புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண் பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதா புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின் புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனே திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந் தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலா சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. |
கரிய நிறம் உள்ள கூந்தலை விரித்தும், வெளித் தோன்றும் கயல் மீனை ஒத்த கண்களை விழித்தும், யானை போன்றும் மலை போன்றும் உள்ள மார்பகங்களை உடையவராக, கைகளில் அணிந்துள்ள வளையல்களையும் பொன் சங்கிலி மாலைகளையும் ஒலி செய்தும், மேகலை அணிந்துள்ள புடவையை பள பளப்புடன் உடுத்தும், தம்மைப் பணிந்து ஒழுகும் ஆடவர்களை ஏற்று அவர்களின் மனத்தை அழிக்கும் வஞ்சகர்களாகிய விலைமாதர்களின் தொடர்பை விலக்கி, உனது மனம் மகிழ்ச்சி அடைய, தவக் கடலில் மூழ்கிக் குளித்து இப்பொழுது உனக்கு அடிமை பூண்டு, உன் தலமாகிய திருத்தணிகையில் இருக்கும்படியான பாக்கியத்தைக் கண் பார்த்து அருளுக. திரி புரங்களையும் எரித்து, அழகிய யானையையும் தோல் உரித்து, ஒளி வீசும் திருநீற்றை ஆபரணமாகக் கொண்ட என் தந்தையாகிய சிவ பெருமானின் குரு நாதனே, தோளில் ஆபரணமாக கடப்ப மாலையை அணிந்து, மேலான தன்மையை உற்று இனிய புகழ் அமுதத்தைக் கொண்ட திண்ணிய புலவனே, கூட்டமான குதிரைகளும், யானைகளும் பொடிபடவும், அசுரர்கள் சிதறுண்ணவும் வேலைச் செலுத்திய ஒளி வேலனே, சிறப்புடனே குறப் பெண்ணாகிய வள்ளி மகிழ்கின்ற வெற்றியும் அழகும் கொண்ட திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 253 | 254 | 255 | 256 | 257 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனத்தன, கொண்ட, தனத்தம், திருத்தணிகையில், அணிந்துள்ள, உள்ள, விரித்தும், பெருமாளே, போன்றும்

