திருப்புகழ் - பாடல் 1236 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
|
தனன தந்த தத்த தனன தந்த தத்த தனன தந்த தத்த ...... தனதான |
|
குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற குடிலி லொன்றி நிற்கு ...... முயிர்மாயம் குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப கொடிய கொண்ட லொத்த ...... வுருவாகி மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து மரண மென்ற துக்க ...... மணுகாமுன் மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் அறுகு மிந்து மத்த மலையெ றிந்த அப்பு மளிசி றந்த புட்ப ...... மதுசூடி அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு அரிய இன்சொல் செப்பு ...... முருகோனே சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த சிறுமி தன்த னத்தை ...... யணைமார்பா திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே. |
குறைவு இல்லா வகையில், நிறைய நீர், எலும்பு முதலியவை நெருங்கிய வீடாகிய உடலில் பொருந்தி இருக்கும் உயிர் என்கின்ற மாயப் பொருள், நிலை கெட்டு, தெர்ப்பைப் படுக்கையில் (சுடுகாட்டுக்கு அனுப்புவதற்காக) கிடத்த வேண்டும் என்று (உறவினர்கள்) நினைத்து நிற்கும் போது, பொல்லாதவனாய் கரு மேகம் நிகரான உருவத்துடன் யமன் வந்து கொடிய செயல்களைச் செய்து வருத்தி, இறப்பு என்ற துயரம் என்னைக் கூடுவதற்கு முன்பாக, நான் மன வேதனைகள் இல்லாமல் உனது திருவடியைத் தியானித்து நிற்க, மயிலின் மீது ஏறி வந்து வீட்டுப் பேற்றைத் தர வேண்டும். அறுகு, பிறைச் சந்திரன், ஊமத்த மலர், அலைகள் வீசும் கங்கை நீர், வண்டுகள் நிரம்பி மொய்க்கும் மலர்கள் இவைகளைச் சூடிக் கொண்டு, அருமையான ஊழிக் கூத்தாம் நடனத்தைச் செய்த தந்தையாகிய சிவ பெருமான் உபதேசப் பொருளை அருள்வாயாக என்று உன்னை வேண்டி இரங்கவும், (அதற்கு இசைந்து) அருமையான இனிய பிரணவ மந்திரத்தை அவருக்கு உபதேசித்த முருகனே, கீழான குறக் குலத்தில் ஞான நிலை கூடித் தோன்றிய சிறுமியாகிய குறப் பெண்ணின் மார்புகளை அணைந்த திருமார்பனே, பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளைத் திறந்துவிட்டு, தேவர்களை விடுவித்த பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1234 | 1235 | 1236 | 1237 | 1238 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, தந்த, தத்த, வேண்டும், நிலை, என்று, தேவர்களை, அருமையான, நீர், அறுகு, னைந்து, கொடிய, கொண்ட, நிற்க, பெருமாளே

