திருப்புகழ் - பாடல் 1235 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
|
தனதனன தாத்தன தனதனன தாத்தன தனதனன தாத்தன ...... தனதான |
|
குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமுமிறு மாப்புமி ...... குதியான கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ குருடுபடு மோட்டென ...... வுடல்வீழில் அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ அரிடசுடு காட்டிடை ...... யிடுகாயம் அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத அருணசர ணாஸ்பதம் ...... அருள்வாயே அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென அலறிவிழ வேர்க்குல ...... மொடுசாய அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ அயிலலகு சேப்பெழ ...... மறைநாலும் உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட உயரமரர் மேற்பட ...... வடியாத உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன் உலகுகுடி யேற்றிய ...... பெருமாளே. |
குடிப்பிறப்பின் ஒழுக்கத்துக்கு ஏற்ற மனைவியும், ஏவலாலர்களுடைய கூட்டமும், குலப் பெருமையும், ஆணவச் செருக்கும் மிகுந்து நிற்கும் பொல்லாத இப்பெரிய வாழ்க்கையில் இனிமை தரும் பொருளைச் சேகரித்து, கண் தெரியாத குருடுபோல் இங்கும் அங்கும் அலைந்த இந்த உடம்பு இறந்து வீழ்ந்தால், தகுந்த உடையைத் தவிர்த்து, (அதற்குப் பதிலாகச்) சிறிய பழைய துணி ஒன்றால் (பிணத்தைப்) போர்த்தி, துயரத்துக்கு இடமான சுடு காட்டில் போடப்பட்டு உடல் எரிந்து அழிந்து போகும் சமயத்தில், உனது குற்றமற்ற, மலர் போன்ற, சிறந்த நிலையாகிய சிவந்த திருவடி என்னும் பற்றுக் கோட்டை அருள்வாயாக. அடியோடு (சூரனாகிய) பெரிய மாமரம் மொள மொள மொள என்னும் ஒலியோடு அலறிக் கூச்சலிட்டு விழ, (தன்னுடைய) வேர் போன்ற எல்லா அசுரர் கூட்டத்துடன் சாய்ந்து அழிய, அசுரர்கள் சேனை தோல்வி அடைய, அருமையான கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் முதலிய மலைகள் கூக்குரல் இட்டு இடிய, வேலாயுதம் (ரத்தத்தின்) செந்நிறம் காட்ட, நான்கு வேதங்களும் வல்ல முனியாகிய பிரமன் தனது ஆணவம் அடங்க, எதிர்த்து வந்த அசுரர்கள் கீழ்மை அடைய, சிறந்த தேவர்கள் மேம்பட்டு விளங்க, வற்றாத கடலும் பூமி பிளவு கொண்டது போலப் பிளவுபட, பழையவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய இந்திரனை பொன்னுலகில் மீண்டும் குடி ஏற்றி வைத்த பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1233 | 1234 | 1235 | 1236 | 1237 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதனன, தாத்தன, அசுரர்கள், அடைய, என்னும், போன்ற, கூட்டமும், பெருமாளே, சிறந்த

