மயில் விருத்தம் - மயில் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு
|
சக்ரப் ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளி பட்டுக் க்ரவுஞ்ச சயிலன் தகரப் பெருங்க் கனக சிகர சிலம்புமெழு தனிவெற்பும் அம்புவியும் எண் திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு சித்ரப் பதம் பெயரவே சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம் பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுன் கவுரி பத்மப் பதங்க் கமழ்தரும் பகீரதி ஜடில யொகீசுரர்க் உரிய பரம உபதேசம் அறிவி கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு கந்த சுவாமி தணிகை கல்லார கிரியுருக வரு கிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே (கலாபத்தில் இலகு மயிலே |
சக்ரவாளம் என்கிற பெரிய வலிமை உடைய மலை, அடியோடு பிளவு பட்டு, வெளியில் சிதறவும், கிரவுஞ்ச மலை பொடியாகப் போகவும், பெரிய தங்க நிற மயமான பெரிய சிகரங்களை உடைய மேரு மலையும், சூரனுக்குக் காவலாக இருந்த ஏழு மலைகளும், அழகிய பூவுலகும், எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட குல கிரியும் ஒன்று பட்டு சேர்ந்து குலுங்கவும், அடி எடுத்து வருகின்ற அழகிய கால்கள் மெதுவாக வந்தவுடனேயே, ஆதிசேஷனின் திருமுடிகள் கலங்க, போர் புரியும் அசுரர் திண்டாட, திகைத்து நடுக்கமுற நடனம் செய்யும் மயிலாகும் (அது யாருடையது என வினாவினால்) தனது இடப்பக்கத்தில் சேர்ந்திருக்கும், பச்சை நிறமுடைய பார்வதி தேவியின், தாமரை போன்ற திருவடிகளின் நறு மணம் வீசும், கங்கையை புனைந்திருக்கும் ஜடா முடியை உடைய, யோக மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு தகுந்த பிரணவ உபதேசம் செய்வதற்காக, வளமான சரவணப் பொய்கையில் அவதரித்தக் கந்தக் கடவுளின், திருத்தணிகையில், செங்கழுநீர்மலை உருகும் படி, போரொளி பொருந்திய, மரகத நிறம் உடைய, தோகைகளை உடைய மயிலே அது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mayil Virutham, மயில் விருத்தம், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உடைய, மயிலே, பெரிய, இலகு, கலாபத்தில், மரகத, அழகிய, பட்டு, உபதேசம், திண்டாட

