முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 340
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 340
“1871ல் வார்ஸாவிலிருந்து வெற்றி பெற்ற ஜெர்மனி, பிரஷ்யாவின் அரசர் முதலாவது வில்லியமை அகில ஜெர்மனிக்கும் கெய்ஸர் (சக்கரவர்த்தி) என்று பிரகடனப் படுத்தியது. அதற்கடுத்த வருடம் (1872) பிற்போக்காளர்களான ஆங்கில முதலாளிகள் (டோரிகள்) இங்கிலாந்தின் யூதப் பிரதம மந்திரியான டிஸ்ரைலி மூலம் சாம்ராஜ்யக் கொள்கையைப் பிரகடனப் படுத்தினார்கள். அது வெறும் பிரகடனமல்ல; உண்மையை வெளிப்படுத்துவதேயாகும். அப்பொழுது, இங்கிலாந்திலே தொழிற்சாலைகள் ஏராளமாகப் பெருகிவிட்டன. அவற்றிற்காக, பாதுகாக்கப்பட்ட சந்தைகள் அவசியமாயிருந்தன. ஜெர்மனி, பிரான்ஸ் சாமான்களின் போட்டியைப் பற்றிய பயமில்லாத சந்தைகள், அதாவது வியாபாரத்தின் முழுநிர்வாகமும், உரிமையும் தங்கள் கையிலேயே இருக்கும்படியான சந்தைகள் வேண்டுமென்று கருதினார்கள். மேலும் மூலதனம் ஏராளமாகப் பெருகிவிட்டது. அதை லாபகரமாக உபயோகிப்பதற்குப் பாதுகாப்பான இடங்கள் வேண்டும். இவைகளுக்கு மற்ற நாடுகளைப் பூரணமாகத் தங்களின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தால்தான் முடியும். டிஸ்ரைலியின் ‘சாம்ராஜ்யம்’ என்ற சொல்லுக்கு இதுதான் அர்த்தம். இந்த இரண்டு விஷயங்களுக்கும், இந்தியாவிலே போதுமான வசதியிருந்தது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு மிகச் சமீபமானதும் சுலபமானதுமான வழி 1866ல் திறக்கப்பட்ட
சூயஸ் கால்வாய்தான். 1875ல் எகிப்து கதீப்பினுடைய 1,77,000 சூயெஸ் கால்வாய் கம்பெனி ஷேர்களையும் நாற்பது லட்சம் பவுனுக்குத் தந்தி மூலம் டிஸ்ரைலி வாங்கினான். சாம்ராஜ்யப் பிரகடனத்திற்கு அடுத்த அடி முன்னேற்றம் இது. 1877 ஜனவரி முதல் தேதி டெல்லியில் ஒரு தர்பார் நடத்தி, மகாராணி விக்டோரியாவை சக்கரவர்த்தினி என்று பிரகடனப்படுத்தியது டிஸ்ரைலியின் சர்க்கார். இதன்மூலம் சாம்ராஜ்யக் கொள்கை பலமாக உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது லிபரல் பார்ட்டியின் கிளாட்ஸ்டன் அல்ல; அவன் தாத்தா பிரதமராயிருந்தாலும், டிஸ்ரைலியின் கொள்கையிலிருந்து மாறி நடப்பது சுலபமல்ல.”
“நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு இன்றுவரை, மகாராணி விக்டோரியா இந்தியாவின் சக்ரவர்த்தினிப் (கெய்ஸர்-ஏ ஹிந்த்) பதவியை ஏற்றுக்கொண்டு இந்நாட்டிற்குப் பெரிய அநுக்கிரகம் செய்திருக்கிறாள் என்றுதான் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறோம்.”
“ஆறு வருடங்களுக்கு முன்னால் பிரஷ்ய அரசனும் கெய்ஸர் (சக்ரவர்த்தி) என்ற பட்டத்தைத்தான் ஏற்றுக்கொண்டான். கெய்ஸர் என்ற சொல்லுக்கு இப்பொழுது ரொம்பக் கிராக்கி ஏற்பட்டுவிட்டது. ரோம் சாம்ராஜ்யக் காலத்தில் ஒதுக்கப்பட்ட இந்தச் சொல்லிற்கு, திடீரென்று சந்தையிலே அதிகக் கிராக்கி ஏற்பட்டுவிட்டது.”
“அதோடுகூட, ரோமன் பாஷைச் சொல்லான இந்தக் கெய்ஸர் என்ற சொல்லை இந்தியாவிலே உபயோகிப்பதும், அதன் இடத்திலே ஆங்கிலச்
சொல்லான எம்பரர்-எம்பரஸ் என்ற சொற்களை வைப்பதும், ஏதோ முக்கியமான கருத்தோடுதான் என்று கருதுகிறேன்.”
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 338 | 339 | 340 | 341 | 342 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கெய்ஸர், என்ற, டிஸ்ரைலியின், சாம்ராஜ்யக், என்று, சந்தைகள் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

