முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 134
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 134
கர்மபலன் தான் காரணம் என்று நான் கூறுகிறேன். முன்ஜென்மத்தின் நல்வினை தீவினைகளின் பலனை இந்த ஜன்மத்தில் நாம் பிரத்தியட்சமாகக் காண்கிறோம் என்று உபதேசிக்கிறேன்.”
“அப்படியானால், திருடனும் கூடத் திருட்டுச் சொத்தை முன் ஜென்மவினையின் பலனென்று கூறமுடியுமல்லவா?”
“ஆனால் நாம் நீண்ட நாட்களாகத் தேவதைகள், மகரிஷிகள், ஜனங்களின் நம்பிக்கை முதலிய உதவிகளைப் பெற்று அனுபவித்து வந்திருக்கிறோமாகையால், இப்போது திடீரெனத் திருடப்படும் சொத்து முன்ஜன்ம வினையின் பலன் என்று ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நாம் உழைக்காமல் பெற்ற பொருள்களை, தேவதைகளின் கிருபையினால் பெற்றதாக இதுவரை சொல்லி வந்தோம்; இப்போது தேவதைகளின் மீதும் அவற்றின் கிருபையிலும், ஜனங்களுக்கு அவநம்பிக்கை ஏற்படத் தொடங்கிவிட்டது. ஆகவே, நாம் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். பிராமணர்களிடமோ, சிந்தனா சக்தியே அற்றுப் போய்விட்டது. மகரிஷிகளின்
பழைய மந்திரங்களையும், வாசகங்களையும் உருப்போடுவதிலேயே அவர்கள் நாற்பது, நாற்பத்துஐந்து வயதைத் தாண்டி விடுகிறார்கள். அதற்கப்பால் பெரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் சக்தி எங்கே இருக்கப் போகிறது?”
“நீயும்கூட அவைகளை உருப்போடுவதிலேயே அதிக காலத்தைச் செலவிட்டாயே, பிரவாஹன்?”
“கேவலம், பதினாறு வருடங்கள். இருபத்திநாலாவது வயதில் நான் பிராமணர்களின் கலைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்து வெளியே வந்துவிட்டேன். வெளியுலகிலே கற்றுக் கொள்வதற்கு இன்னும் அநேக விஷயங்கள் கிடைத்தன. அரச நிர்வாக காரியங்களுள் நுழைந்த பிறகு, பிராமணர்கள் செய்த அந்தப் பழைய படகு உறுதியற்று இருக்கிறதென்பதைக் கண்டேன்.”
“அதற்காக ஒரு புதிய உறுதியான படகைச் செய்தாயாக்கும்?”
“சத்தியம், அசத்தியத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. காரிய சாத்தியத்தைப் பற்றிதான் எனக்குக் கவலை, லோபா! இந்த உலகத்தில் திரும்பப் பிறப்பது என்ற விஷயம் இன்று புதிதாக இருக்கிறது. மேலும் அதற்குள் மறைந்திருக்கும் சுயநலமும் உனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எனது பிராமண சிஷ்யர்கள், இப்பொழுது அதை நாலா பக்கமும் பரப்பத் தொடங்கிவிட்டார்கள். பிதுர்லோகப் பாதையையும், தேவலோகப் பாதையையும் பற்றிப் புரிந்து கொள்வதற்கு இப்பொழுதிருந்தே ஜனங்கள் பத்துப் பன்னிரெண்டு வருடங்களைச் செலவிடத் தயாராகி விட்டார்கள், லோபா! அப்பொழுது நீயும்,
நானும் இருக்க மாட்டோம். ஆனால் ஏழைப் பிரஜைகள் தங்களுடைய மறுஜென்ம நம்பிக்கையிலே, எல்லாவிதக் கஷ்டங்களையும், துன்பங்களையும், அநியாயத்தையும் கூடச் சகித்துக் கொள்ளக்கூடிய காலம் வரும். சொர்க்கத்தையும், நரகத்தையும் பற்றி உணர்த்துவதற்கு, நான் கண்டுபிடித்துள்ள வழி எவ்வளவு சுலபமானது பார்த்தாயா?”
“ஆனால் தன்னுடைய வயிற்றை நிரப்புவதற்காக, நூற்றுக்கணக்கான தலைமுறைகளுக்கு ஜனங்களை வெள்ளத்தில் மூழ்கடிப்பதா?”
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 132 | 133 | 134 | 135 | 136 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாம், நான், என்று - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

