முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 210
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 210

இலக்கிய உலகில் விளங்குபவர் குமரகுருபரர் என்பவர் (17-ஆம் நூற்றாண்டு). அவர் இளமையிலேயே துறவியானவர்; இளமையிலே கவி பாடுவதில் சிறந்து விளங்கியவர். மதுரையில் அரசாண்டுவந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளின்படி, மதுரைக் கோயிலின் மீனாட்சியம்மையின்மேல் பிள்ளைத்தமிழ் பாடினார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் அந்த நூலுக்கு பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் சிறப்பான இடம் உண்டு. அதில் உள்ள பாட்டுகள் பக்திச்சுவையும் இலக்கிய நயமும் இனிய ஓசைச் சிறப்பும் உடையவை. மதுரை என்ற நகரத்தைப்பற்றிய கலம்பக நூலும் பாடினார். திருவாரூர்பற்றி நான்மணிமாலை என்ற இலக்கியமும், சிதம்பரத்தைப்பற்றி மும்மணிக் கோவை, செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டைமணிமாலை என்ற நூல்களும் இயற்றினார். தருமபுரத்தில் தம்முடைய ஆசிரியர்மேல் பண்டார மும்மணிக்கோவை என்ற நூல் இயற்றினார். தமிழ்ப்புலவர்களுள் வடநாட்டுக்குச் சென்று தங்கியிருந்து தமிழ்நூல்கள் பாடியவர் அவர் ஒருவரே. காசியில் தங்கி ஒரு மடத்தை ஏற்படுத்தினார். அது இன்னும் உள்ளது. அப்போது தில்லியை ஆண்ட முகலாய அரசரிடம் பேசி அவருடைய உதவி பெற முயன்றார். அதற்காக இந்துஸ்தானி மொழி கற்கக் கலைமகளின் அருளை வேண்டிச் சகலகலாவல்லிமாலை பாடினார். வடநாட்டில் தங்கியிருந்தபோது கம்பராமாயணத்தை இந்துஸ்தானியில் விளக்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். வேறு புராணப் பிரசங்கங்களும் சைவ சமய உபதேசங்களும் நிகழ்த்தினார். காசியைப் புகழ்ந்து கலம்பகம் இயற்றினார். காசியிலேயே முத்தியும் பெற்றார்.
அவர் இயற்றிய மற்றொரு பிள்ளைத்தமிழ் நூல் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்பது. குறத்தி தெய்வ அருள்பற்றிக் குறிசொல்லும் முறையில் அமைந்தது மீனாட்சியம்மை குறம் என்பது. அவருடைய எந்த நூலிலும் கற்பனைவளம் காணலாம்; இனிய ஓசைநயமும் பொருட்சுவையும் காணலாம். நீதிகளைச் சொல்வதிலும் தௌ¤வும் திறனும் உடைய புலவர் என்பதை அவருடைய நீதிநெறிவிளக்கம் என்னும் நூலில் காணலாம். அது 120 வெண்பாக்களால் ஆகியது. உவமைகள் நிரம்பியது.
காப்பியங்களும் புராணங்களும் வளர்ந்தபின், இயற்கையின் அழகை உள்ளவாறு எடுத்துக் கூறும் சொல்லோவியங்கள் குறைந்து, உயர்வு நவிற்சியாகப் புனைந்து கூறும் வருணனைகள் மிகுந்தன. சங்ககால இலக்கியத்தில் வாழ்வில் கண்டவற்றை விளக்கிக் கூறும் அழகிய சொல்லோவியங்களே பெரும்பாலும் காண்கிறோம். ஒருசில இடங்களில் உயர்வுநவிற்சிகளும் காணப்படுகின்றன; அவைகளும் உள்ளவற்றை உணர்ச்சியோடு கூறும் காரணத்தால், மிகைப்படுத்திக் கூறுவனவாக உள்ளனவே அல்லாமல், இல்லாதவற்றைப் புனைந்து கூறும்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 208 | 209 | 210 | 211 | 212 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 210 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - கூறும், பிள்ளைத்தமிழ், காணலாம், அவருடைய, இயற்றினார், பாடினார், அவர்

