முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 102
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 102

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார், ஆறாம் நூற்றாண்டில் காரைக்கால் என்ற ஊரில் ஒரு வணிகர்க்கு மனைவியாய் இல்லறம் நடத்திவந்த போது, அவருடைய வாழக்கையில் அற்புதச் செயல் ஒன்று நடந்தது. அது கண்டவுடன், கணவருக்கு மனைவிடம் இருந்த காதல் நீங்கி, மதிப்பும் அச்சமும் ஏற்பட்டன. மனைவியாகக் கருதி அன்பு செலுத்த அவரால் முடியவில்லை. அந்த அம்மையாரை விட்டு நீங்கி வேறு ஊரில் வேறொருத்தியை மணம் செய்துகொண்டு வாழத் தொடங்கினார். அதை அறிந்த காரைக்கால் அம்மையார், இனிமேல் இந்த இளமையும் அழகும் யாருக்காக என்று வெறுத்தார். ஒரு பேய்போல் திரிந்து சிவபெருமானைப் பாடி உருகித் திருவாலங்காடு என்னும் ஊர்க்குச் சென்று வழிபாடு செய்து முத்தி பெற்றார். தம்மைக் காரைக்கால் பேய் என்று பாடலில் குறிப்பிட்டுக் கொள்கிறார். சென்னையிலிருந்து முப்பது மைல் தொலைவில் உள்ள அந்த ஊரின் கோயிலில் இன்றும் அவருடைய வழிபாடும் திருவிழாவும் நடக்கின்றன. அவர் பாடிய பக்திப் பாடல்கள் அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை, மூத்த திருப்பதிகங்கள் என்று மூன்று நூல்களாகவே உள்ளன. அந்தப் பாடல்களே தமிழில் உள்ள சைவ சமயத்துப் பக்திப் பாடல்களுள் மிகப் பழமையானவை. அவை பக்தியும் ஞானமும் நிரம்பிய பழம்பாடல்களாக இன்னும் போற்றப்பட்டு வருகின்றன.
“நான் இந்த உலகில் பிறந்து பேசக் கற்றுக்கொண்ட பிறகு உன்னுடைய திருவடிகளில் அன்பு மிகுந்து உன்னிடமே அடைக்கலமாகச் சேர்ந்தேன். சிவபெருமானே! என்னுடைய இடரை நீ தீர்ப்பது எந்நாள்?” “சிவபெருமான் என் இடரைத் தீர்க்காவிட்டாலும், என்னிடம் இரக்கம் கொள்ளாவிட்டாலும் யான் செல்லத்தக்க நெறி இன்னது என்று ஆணை இடாவிட்டாலும், என் கடவுளாகிய அவரிடம் கொண்ட அன்பு என் நெஞ்சைவிட்டு நீங்காது.” இவ்வாறு தம் பக்தியையும் மாறாத ஈடுபாட்டையும் பல பாடல்களில் பாடியுள்ளார்.
முதல் ஆழ்வார் மூவர்
பூதத்தாழ்வார் பாடியுள்ள ஒரு பாடலில் பக்தியும் ஞானமும் கலந்த தம் வழிபாட்டைப்பற்றிக் கூறியுள்ளார். தாம் வழி பாட்டுக்காக ஒரு ஞான விளக்கு ஏற்றினாராம். அந்த விளக்குக்குத் தகளி அல்லது அகல் எது? அன்பே அந்த விளக்கினே தகளி. தம் ஆர்வமே அதற்கு நெய். பக்தியால் உருகும் மனமே அந்த விளக்குக்கு உரிய திரி. “இவ்வாறு நாராயணனுக்கு ஞானத் தமிழை விரும்பிப் பாடிய நான், நன்றாக உருகி ஞானவிளக்கு ஏற்றினேன்” என்கிறார்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 100 | 101 | 102 | 103 | 104 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 102 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - காரைக்கால், அந்த, அம்மையார், அன்பு

