கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்

“எனக்கு என்று கடமைகள் சில இருக்கின்றன; உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய எனக்குத் தெரியாது; செஞ்சோற்றுக்கடன் செய்து முடிப்பதில் நான் நாட்டமுடையவன்”.
“தேவரும் பிறரும் போற்ற ஒருவனாய் உலகினை ஆண்ட நம் அண்ணன், இராவணன் சுற்றமும் படைகளும் தனக்காக உயிர்விட்டுத் தன்னுடன் விழுந்து கிடக்கத் தம்பியருள் ஒருவரும் இன்றி மடிந்து கிடக்கலாமோ? உலகம் என் சொல்லும்?”
“வாழ்வினில் பங்கு கொண்டேன்; சாவில் பங்குகொள்ளாது அங்கு வந்தால் அது மானம் கெட்ட வாழ்வு; அதை நிதானமாய் நினைத்துப்பார்”.
“இராவணன் தவறு செய்கிறான்; சொல்லிப் பார்த்தோம்; பயனில்லை; அவன் தலைமையை ஏற்ற, நாம் முன் அவனுக்காக அவனுக்கு மடிவதே அறம்: பகைவரோடுகூடி அவனை எதிர்த்துப் போரிடுவது அன்று” என்றான்.
இதற்கு மேலும் அவனை வற்புறுத்திப் பயன் இல்லை என்பதை வீடணன் அறிந்தான். இறுதியில் கும்பகருணன், “நடப்பது நடந்துதான் தீரும். விதியைக் கடப்பது அரிது” என்று ஒரு தத்துவக் கோட்பாட்டினை உரைத்தான்.
“ஆகுவது ஆகும் காலத்து; அழிவதும் அழிந்து சீந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்;
சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார்உளர்? வருத்தம் செய்யாது,
ஏகுதி, எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்”
என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.
‘என்றும் உள்ளாய்’ என்பது வாழ்த்தாகவும் எள்ளும் நகையாகவும் அமையக் கூறினான் கும்ப கருணன்.
உடன்பிறப்பு என்னும் பாசத்துக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, இராமனை அடைந்தான் வீடணன்.
“என்ன ஆயிற்று” என்று கேட்ட வினாவுக்கு வீடணன் “'உய்திறன் உடையார்க்கு அன்றோ அறவழி ஒழுகும் உள்ளம்? அவன் குட்டையில் ஊறிய மட்டை” என்று அவனைப் பற்றி விமரிசித்து முடித்தான் வீடணன்.
படுகளத்தில் ஒப்பாரி ஏது? சேனைகள் மோதின; அங்கதன், அனுமன், இலக்குவன் எனப் பலரும் கும்ப கருணனோடு சொற்போரும், மற்போரும், விற்போரும் செய்தனர். சுக்கிரீவனுக்கும் கும்ப கருணனுக்கும் கடும்போர் நடந்தது. கும்பகருணன் சுக்கிரீவனை வான்வழியே தூக்கிச் செல்ல முனைந்தான். அவனைத் தடுக்க இராமன் அம்புகள் விட்டுச் சரகூடம் அமைத்தான்; இராமன் விட்ட அம்பு கும்ப கருணன் நெற்றியில் பாய்ந்தது; குருதி கொட்டியது; அவன் கைப்பிடி தளர்ந்தது; குருதி சுக்கிரீவன் முகத்தில் பட்டதால், அவன் மயக்கம் தீர்ந்து, கும்பகருணனின் மூக்கையும் செவியையும் கடித்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
தொடர்ந்து நடந்த போரில், இராமன் விட்ட அம்புகளால் கும்பகருணன் கைகளும் கால்களும் இழந்து அரை மனிதன் ஆனான். இராமன் அம்புபட்ட வேதனை யால் அவனோடு எந்த வம்பும் யாரும் வைத்துக் கொள்ள முடியாது, என்ற முடிவுக்கு வந்தான் கும்பகருணன்.
“இராமன் வில்தொழிலுக்கு ஆயிரம் இராவணர் வந்து எதிர்த்தாலும் சமம் ஆகார்; இனி இராவணன் உயிர் பிழைக்க மாட்டான்” என்ற முடிவுக்கு வந்தான்.
காலனும் அஞ்சும் கும்பகருணனுக்கு முடிவு காலம் நெருங்கியது; உயிர்விடுமுன் தம்பிக்கு அருள் செய்யுமாறு இராமனை வேண்டி நின்றான்.
“நீதியால் வந்த நெறி அல்லால் சாதியால் வந்த நெறி அவன் அறியான் என் தம்பி; அவன் உன்னை அடைக்கலமாய் அடைந்திருக்கிறான்; படைக்கலம் உடைய இராவணன் கையில் இவன் அகப்பட்டால்; “உயிர்வேறு உடல் வேறு” என்று ஆக்கிவிடுவான்; அவனைக் காப்பது உன் கடமை; இந்த வரத்தை யான் வேண்டுகிறேன்”.
“மூக்கிலா முகம்” என்று என்னை நோக்கி முனிவர்களும் தேவர்களும் இகழ்வர்; அதனால் என் தலையை உன் அம்பால் அறுத்துக் கடலில் போக்குவாய்” என்று கேட்டுக் கொண்டான்.
இராமன் அம்பு தொடுத்தான்; அவன் தலைமட்டும் தனியே அறுந்து அலை நிரம்பிய கடலுள் ஆழ்ந்து மறைந்தது; அதுவே அவனுக்குச் செய்த ஈமக் கடனும் ஆனது.
ராவணன் தீரா ஆசை
போர்க்களத்துக்குத் தம்பி கும்பகருணனை அனுப்பிய இராவணன் முடிவுக்குக் காத்திராமல் தன்காதல் நோய்க்கு விடிவு காண விழைந்தான்; போரில் இராமனை வெல்வது என்பதைவிடக் காதலில் சீதையை அடைவது தான் அவனுக்கு முக்கியமாய்ப் பட்டது. அதற்கு வழிதேடி மகோதரனை அறிவுரை கேட்டான்.
அரக்கருள் ஒருவனாகிய மருத்துவன் என்பவனை சனகனாய் உருவெடுத்து வரும்படி பணித்தான்; அவனை அடுத்து வரும்படி இராவணன் கூறிவிட்டு, அமுதின் அனைய அழகியை நாடிச் சென்றான்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், இராவணன், இராமன், கும்ப, வீடணன், கும்பகருணன், அவனை, இராமனை

