கம்பராமாயணம் (உரைநடை) - சுந்தரகாண்டம்

அங்கார தாரகை
அடுத்து அவனைத் தடுத்து நிறுத்தினாள் அங்கார தாரகை என்னும் அரக்கி ஒருத்தி; அவளைக் கண்டு அவன் இரக்கம் காட்டவில்லை; அவன் வாயுள் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான்; அவன் பறக்கும் காற்றாடியானான்; அவனைத் தொடர்ந்து நூலாக அவள் குடல் பின் தொடர்ந்தது.
தடைகள் மூன்றும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டன. கடலைக் கடந்த அவன் கால்கள் பவழ மலையில் பதிவு செய்தன; அம் மலை இலங்கையின் எல்லையில் இருந்தது.
காவல் தெய்வம்
காவல் தெய்வம் ஒருத்தி இரவணன் ஏவலை ஏற்று அங்கு நின்று தடுத்தாள்.
“பொழில் சூழ்ந்த கடலை உடைய இலங்கை யில் உனக்கு என்ன வேலை?” என்று கேட்டான்.
“காலை மாலை இங்கு நீ காவல் நிற்பது ஏன்?”” என்று கேட்டான்.
“அது என் கடமை; நான் காவல் தெய்வம்; நீ இதைக் கடக்க முடியாது” என்றாள். இருவரும் கை கலந்தனர். அவன் அவள் தாக்க அவள் அழகிய பெண்ணாய் அவன் முன் நின்றாள்
“கண்ணைப் பறிக்கும் அழகுடைய பெண்ணே நீ யார்?” என்றான்.
“எழில் கொஞ்சம் நகரைப் படைத்த நாளில் நான்முகன் என்னைக் காவலுக்கு வைத்தான்; அவன் ஏவலுக்குப் பணிந்து உன்னை எதிர்த்து நின்றேன்; அஞ்சனை மகனே! உன் அங்கைபட்டதும் என் கடமையை முடித்துக் கொண்டேன்; கொடுமை நீங்கி அறம் தழைக்கும்; இனித் தீமைகள் ஒழியும் காலம் அணுகிவிட்டது. இச் சித்தரநகர், இனிச் சிதைவடையும்” என்று கூறி வழி விட்டு, விடுதலை பெற்றாள்.
ஊர் தேடுதல்
பெண்ணை ஒதுக்கி வாழ்ந்தவன், பெண்ணைத் தேடும் பணியில் அமர்ந்தான். இது ஒரு புதுமையாய் இருந்தது. இராமன் உரைத்த அடையாளம் அவனுக்கு வரைபடமாய் விளங்கியது. சீதை என்னும் கோதை, எழில் மிகு ஒவியமாய் அவன் மனத்தில் பதிந்திருந்தாள். வழியில் காணும் பெண்களை அவன் விழிகள் சந்தித்தன. அழகு என்பதற்கு அடையாளம் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அரக்கியர் இடையே அணங்கனைய மகளாகிய சீதையைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
தப்பித் தவறி நங்கையர் இளமையோடும் எழிலோடும் தென்பட்டால் தான் எழுதி வைத்த சித்திரம் கொண்டு அவர்களை விசித்திரமாய்ப் பார்த்து வந்தான்.
உறங்குகின்ற கும்பகருணன்
அநுமன் பார்வை கும்பகருணன் மாளிகைப் பக்கம் சென்றது. மலை ஒன்று உருண்டு கிடப்பதைப் பார்த்தான்; அதன் தோற்றத்தைக் கண்டு வியந்தான்; பேருருவம் படைத்த அது நின்றால் எப்படி இருக்கும்? என்று நினைத்தான். மலையின் உருவை அவன் உருவில் வைத்துப் பார்த்தான்; தின்பதற்கே பிறந்தவன் அவன், என்பதை அறிந்தான். ஊனும் கள்ளும் உண்டபின் அவன் உறக்கம் கொண்டவனாய்க் காணப்பட்டான். அவன் குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவதைப் பார்த்தான். ‘பேரரசன் ஒருவன் இப்படிப் பெருந்துயில் பெற்றிருக்க முடியாது’ என்பதால் அவன் இராவணனாய் இருக்க முடியாது என்று தெளிந்தான்.
வீடணன் இருக்கை
அடுத்து அவன் இளவல் வீடணன் மாளிகையை அடைந்தான்; வனப்பும் அழகும் அந்த மாளிகை பெற்றிருந்தது; அங்கே அரக்க வடிவில் ஒரு அசோகனைக் கண்டான்; கறுப்பு நிறத்தில் வெள்ளை உள்ளம் குடி கொண்டிருப்பதைக் காண முடிந்தது; நீதியும் அறமும் அவனிடம் இடம் வேண்டிக் குடிகொண்டிருந்ததைக் காண முடிந்தது; ‘பகை நடுவே உறவு கொள்ள ஒருவன் உளன்’ என்பதை அறிந்தான். ‘இவன் தப்பிப் பிறந்தவன்’ என்ற முடிவுக்கு வந்தான்; கும்பகருணன் தம்பி வீடணனாகத் தான் இருக்க வேண்டும் என்று அறிந்தான்; அவன் மீது இவன் கண்ணோட்டம் சென்றது; ‘இவன் பயன்படத் தக்கவன், என்று மதிப்பீடு செய்து கொண்டான்.
இந்திரசித்தன் மாளிகை
அடுத்து, இந்திரசித்தின் அரண்மனையை அடைந்தான்; ‘இவன் இந்திரனைச் சிறையிட்டவன்’ என்பதை முன்பே கேட்டு அறிந்திருக்கிறான்; அரக்கர் குலத்தில் அழகு உடைய இளைஞன் இருந்தது அவனுக்கு வியப்பை ஊட்டியது; அவனை முருகனாய்ப் பார்த்தான். ‘இவனோடு நீண்ட போர் நிகழ்ந்த வேண்டிவரும்’ என்று மதித்தான்; “இவன் ஒரு மாவீரனாய் இருக்க வேண்டும்” என்று கண்டான்; இவனைப் போன்ற வீரர் இருப்பதால்தான் இராவணன் வலிமை மிக்கவனாய் இருக்கிறான், என முடிவு செய்தான்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுந்தரகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், காவல், பார்த்தான், என்பதை, அறிந்தான், இருக்க, ‘இவன், தெய்வம், வந்தான், அவள், அடுத்து, கும்பகருணன்

