சேர மன்னர் வரலாறு - ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்

பிறிதொருகால், சேரலாதன் வஞ்சிநகர்க்கண் இருந்தபோது, இனிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இரவுக் காலத்தில் ஆடல் மகளிர் சிலர் துணங்கை ஆடலுற்றனர். உயரிய கால் விளக்கை நிறுத்திப் பெருவிளக்கம் செய்யப்பட்டது. துணங்கைக் களத்தில் முழவு முதலிய இசைக்கருவிகள் முழங்கின; அரங்கேறும் மக்கட்கு வேந்தர் தலைக்கை தந்து, அவர்களுடைய ஆடல் பாடல்களைத் தொடங்கி வைப்பது வழக்கம். அவ்வாறே சேரலாதன் ஆடல் மகள் ஒருத்திக்குத் தலைக்கை தந்து துணங்கையாடி வந்தான். மனைக்கண் புகுதலும் அவன் மனைவி ஊடிப் பிணங்கலுற்றான். வேந்தன், அவளது ஊடலைத் தீர்க்கும் இன்சொற்கள் பல எடுத்துரைத்தான். உரைக்குந்தோறும் அவட்கு ஊடல் மிகுந்ததேயன்றிக் குறையவில்லை. அவ் வூடல் முதிர்ந்து துனியைப் பயக்கும் எல்லையை நெருங்குதலும், கண் கலுழக், காலில் அணிந்த கிண்கிணி ஒலிப்ப, உடல் நடுங்க , நேர் நின்று, வாயிதழ் துடிப்பது, கையில் இருந்த செங்குவளைப் பூவைச் சேரலாதன் மேல் எறிதற்கு ஓங்கினாள். அப் பூ, தன்மேற் பட்டு வாடுதல் ஆகாது என்ற அருளுள்ளத்தாலும், அவள் கையகத்தில் இருந்து தன் கையை அடைதல் தகுமே யன்றி நிலத்து வீழ்வது கூடாது என்ற காதலுணர்வாலும், இருகையையும் ஏந்தி என் கையகத்து ஈக’ என இரந்து நின்றான். அவள், அதற்கு உடன்படாது, “நீ எமக்கு யாரையோ'’ என்று அவ்விடம் விட்டுப் பெயர்ந்தாள். பின்னர், காக்கை பாடினியார் சென்று அரசமாதேவி ஊடல் உணரத் தகுவன கூறி வேந்தன் அடியில் வீழ்ந்து பணியச் செய்தார்.
பின் பொருகால், காக்கைபாடினியார் இந் நிகழ்ச்சியை ஒரு பாட்டிடை வைத்துப் பாடி,[17] நின் காதலி எறிதற்கு ஓச்சிய சிறு செங்குவளையை அவளைப் பற்றிக் கைக் கொள்ளமாட்டாயாகிய நீ, பகைவருடைய வான்தோயும் எயில்களை எங்ஙனம் கைக்கொள்ள வல்லவனையினை? என்று இனிமையுற இசைத்தார்.
ஒருகால், சேரலாதன் பொருது வென்ற போர்க் களம் ஒன்றில், அவன் வலியறியாது பகைவர் போந்து பொருது மடிந்தனர். அவர்கள் துறக்க வாழ்வு பெறுவது குறித்து முன்றேர்க் குரவை ஆடினன். அக் காலை, முரசு முழங்க, கையில் வாளேந்தி, மார்பிற் பூணணிந்து, சென்னியில் உழிஞை சூடி, அவன் ஆடியதைக் கண்ட காக்கை பாடினியார், விழாக் காலத்தில் கூத்தரது ஆடுகளத்தில் அவர்கள் ஆடுவதை நம் சேரலாதன் அறியான், ‘வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, வீந்துகு போர்க்களத்து ஆடுங் கோவே[18]’ என்று பாடி இன்புற்றார்.
இவ்வாறு அந்தப்புரத்தும், திருவோலக்கத்தும், எடுத்துச் செலவின்போதும், உடனிருந்து தமிழ் பாடி அறிவின்பம் நல்கிய காக்கைபாடினியார்க்குக் ‘கலன் அணிக’ என ஒன்பது காப்[19]பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்திருக்கும் அரசியற் சுற்றத்தாரோடு உடன் இருந்து அறிவின்பம் நல்குமாறு பணித்தருளினான். இவ்வாறு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான் என்று பதிகம் கூறுகிறது.
காக்கைபாடினியார் சேரலாதனை வாழ்த்திய வாழ்த்துரைகள் ஒரு தனிச் சிறப்புடையவை. சோழநாட்டு வேந்தன் ஒருவன், பண்ணன் என்பவனை வாழ்த்தலுற்று, “பண்ணனே, நீ யான் வாழ்தற்குரிய நாளையும் உன் வாழ்நாளோடு கூட்டி வாழ்க” என வாழ்த்தியதைப் புறநானூற்றில் காண்கின்றோம். இவ் வுலகில் நல்வினை செய்பவர் துறக்க வுலகு சென்று நெடிது நீடுவாழ்வர்” எனத் திருவள்ளுவர் கூறுவதனாலும் அறியலாம். காக்கை பாடினியார், சேரலாதனை வாழ்த்துங்கால், “எனையதூஉம் உயர்நிலை யுலகத்துச் செல்லாதுஇவண் நின்று, இருநில மருங்கில் நெடிது மன்னியரோ[20]” என்று வாழ்த்துவர், வள்ளியோர்க்கு மழை முகிலை உவமம் கூறுவது மரபு. அம் மழைமுகில் மழையைப் பெய்தபின் வெளுத்துப் பஞ்சுத்துய்போலப் பரந்து கெடும்; அதனைக் கண்ட காக்கை பாடினியார், சேரலாதன் கொடையில் மழைமுகிலை யொப்பன்; ஆனால் அவனது வாணாள் அதுபோல் கெடலாகாது என வாழ்த்துவாராய், “பெய்து புறந்தந்து பொங்கலாம், விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்று அறாலியரோ பெரும் ... ஓங்கல் உள்ளத்துக் குரிசில், நின் நாளே[21]” என்று கூறுவர். இவர்க்கு வேண்டும் சிறப்புகளைச் செய்த சேரலாதன் தன் திருவோலகத்துச் சான்றோருள் ஒருவராய்த் தன் பக்கத்துக்கொண்டான் எனப் பதிகம் கூறிற்றாக, அதனை உணராத சிலர், இவரை. அவன் மணந்து கொண்டான் என்று சிறிதும் நாகூசாது கூறியிருக்கின்றனர். அரசன் பக்கத்திருப்ப தென்பது அமைச்சராதல் எனத் திருக்குறள் படித்த இளஞ் சிறுவரும் அறிவர். இச் சிறு பொருளால் விளையும் பெரும்பழியை நினைக்கும் திறமில்லாதார் பலர், தமிழ்நாட்டு வரலாறு எழுதுகின்றோமெனத் துணிந்து கழுவாயில்லாத வழுக்களைத் தமிழர் வாழ்வில் புகுத்தியிருப்பதைத் தமிழறிஞர் இனியும் நோக்காமல் இருப்பது பெரிதும் வருந்தத்தக்கது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - சேரலாதன், காக்கை, பாடினியார், அவன், பாடி, சென்று, வேந்தன், ஆடல்

